அமித்ஷாவுக்கு தண்ணி காட்டிய தமிழ்நாடு – ஒரேநாளில் பல அவமரியாதைகள்

சென்னையில் நேற்று (ஏப்ரல் 11,2025) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், கே.பி.முனுசாமி, வேலுமணி ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அமித்ஷா கூறியதாவது….

தேசிய அளவில் பாஜக தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைகிறது. ஏற்கனவே, இதே கூட்டணி தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வரும் தேர்தலில் இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அதிமுகவுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இதற்காக அதிமுக எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும். தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணி ஆட்சிதான் இருக்கும். கூட்டணியில் பங்கு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்துள்ளது இரு தரப்புக்கும் பலனை ஏற்படுத்தும். தேர்தல் நேரத்தில்தான் தொகுதிப் பங்கீடுகள் குறித்துப் பேசப்படும். இந்தக் கூட்டணி வெற்றி பெற்றவுடன் ஆட்சியில் பங்கு குறித்து பேசப்படும். அதிமுகவுக்குள் எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்றார்.

நேற்று முன் தினம் இரவே சென்னை வந்தார் அமித்ஷா.அப்போதே எடப்பாடி பழனிச்சாமி அவரைச் சந்திப்பார் என்று சொல்லப்பட்டது. அப்படி நடக்கவில்லை.அதன்பின் காலையில் சந்திப்பார் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை.

அதன்காரணமாக மாலையில் சந்திப்பதாகத் திட்டமிட்டிருந்த குருமூர்த்தி வீட்டுக்கு மதியமே சென்றார் அமித்ஷா.திட்டமிட்டதைவிட சுமார் ஐந்து மணி நேரம் முன்கூட்டியே இந்தச் சந்திப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து அவர் கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர விடுதிக்கு வந்தார்.

கூட்டணி குறித்து சரியாக முடிவு எட்டப்படாததால் கடும் கோபத்தில் இருந்தார் அமித்ஷா. இதனால் ஆடிட்டர் குருமூர்த்தியைச் சந்தித்த பிறகு தனது அறைக்கு வந்த அவர், யாரையும் தனது அறைக்குள் அனுமதிக்காமல் தனிமையில் இருந்தார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி வந்ததும்தான் அமித்ஷா தனது அறையில் இருந்து செய்தியாளர் கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்கு வந்தார்.

நேற்று 12 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று அறிவித்து இருந்தது.இதில் பாஜக கூட்டணியில் இருந்த பாமக, அமுமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை விட்டுவிட்டு பாஜக தலைமையை ஏற்று கூட்டணிக்கு வந்தோம் தற்போது அதிமுக கூட்டணியை நாங்கள் எப்படி ஏற்று வர முடியும் என்று கூறி பாஜக கூட்டணிக் கட்சியினர் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

அமுமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென உடல்நலக் குறைவு என்று சொல்லி மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார். பாஜக கூட்டணியில் இருந்த பாமக சார்பில் அன்புமணி இராமதாசு கலந்து கொள்வார் என்று பாஜக தரப்பில் சொல்லப்பட்டிருந்தது.

அதனை அறிந்த பாமக நிறுவனர் இராமதாசு, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக முடிவு எடுத்த பாமக தலைவர் அன்புமணியை அதிரடியாக தலைவர் பதவியில் இருந்து நீக்கிட்டு, பாமக தலைவர் இனி நான்தான் என்று அறிவித்தார். இதனால் பாமக சார்பில் அமித்ஷாவை சந்திக்க காத்திருந்த அன்புமணிக்கு பெரும் இடியாக விழுந்தது.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் யாரும் கலந்து கொள்ளாததால் அமித்ஷா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்தார்.

அதன் பிறகு தான் கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு கிண்டி ஐடிசி விடுதியில் நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் அதிமுக இணைந்தது. இந்தச் சந்திப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மூத்த தலைவர் முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அருகில் அமர்ந்து இருந்த எடப்பாடி பழனிச்சாமி கடும் இறுக்கத்துடன் காணப்பட்டார். அவரை மிரட்டி பாஜக கூட்டணியில் அழைத்து வந்து அமித்ஷா அருகே அமரவைத்தது போல் உட்கார்ந்து இருந்தார்.

முன்னதாக, அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு தொடர்பான மேடையில் இருந்த பதாகைகள் திடீர் திடீரென மாற்றம் செய்யப்பட்டது.

காலை 10 மணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி என பதாகை வைக்கப்பட்டது. 11.30 மணிக்கு தலைவர்கள் படம் எதுவுமின்றி பதாகை வைக்கப்பட்டது. 1.30 மணிக்கு பாஜக கொடி மட்டும் இருந்த பதாகை வைக்கப்பட்டது. 2 மணிக்கு தமிழ்நாடு பாஜக என்கிற பெயரில் புதிய பதாகை வைக்கப்பட்டது. கடைசியாக 5.30 மணிக்கு மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி என வைக்கப்பட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதர்கு, பாஜக கூட்டணித் தலைவர்கள் எல்லாரும் வருவார்கள் என்று நம்பி முதல் நபராக ஜி.கே.வாசன் வந்தார். சிறிது நேரம் காத்திருந்தார். மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரும் வராததால் அமித்ஷாவை சந்தித்து ஜி.கே.வாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியார்களைச் சந்திப்பதாகக் கூறியிருந்த அவர் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து புறப்பட்டார். அவர் புறப்பட்டதும் மேடையில் போட்டிருந்த நாற்காலி ஒன்றை அப்புறப்படுத்தினர்.

ஒன்றிய அளவில் அமித்ஷா மிகப்பெரிய இராஜதந்திரி.அவர் நினைத்ததெல்லாம் நடக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.ஆனால் நேற்று அவருக்கு தமிழ்நாடு தண்ணி காட்டிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

முன் தினம் இரவே எடப்பாடி வருவார் அடுத்து காலையில் சந்திப்பு என்றெல்லாம் சொல்லினர்.அது நடக்கவில்லை.அதன்பின் எதையோ சொல்லி மிரட்டித்தான் அவரை அழைத்து வந்தனர்.அதேபோல் பாமக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகள் எதுவும் அவரை மதிக்கவில்லை.அதன் காரணமாகவே செய்தியாளர் சந்திப்பு பதாகை அடிக்கடி மாற்றப்பட்டது.

இந்திய ஒன்றியத்திலுள்ள வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மேற்சொன்ன பல அவமரியாதைகளை நேற்று ஒரே நாளில் அவர் சந்தித்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.

Leave a Response