
சென்னையில் இருந்து தனி விமானத்தில் மே 27 ஆம் தேதி மதியம் தில்லி சென்றடைந்த விஜய்க்கு, தமிழக அரசு விருந்தினர் இல்லத்தில் தமிழகக் காவல்துறை சார்பில் முறைப்படியான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திரமோடியை விஜய்
சந்தித்துப் பேசினார்.
பிரதமரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விஜய் சந்திப்பதாக இருந்தது.ஆனால்,கடைசி நேரத்தில் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை.
அதையடுத்து விஜய்,நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து தமிழகத்துக்கான திட்டங்கள் குறித்து
பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் காங்கிரசு மூத்த தலைவர்களான சோனியா,இராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரையும் விஜய் சந்திப்பார் என்ற தகவல் வெளியானது.
இதனால் சோனியாவின் இல்லத்தைச் சுற்றிலும் முதல்வர் விஜய்யை வரவேற்று பதாகைகள்
வைக்கப்பட்டிருந்தன.ஆனால் திடீரென காங்கிரசு தலைவர்களுடனான சந்திப்பு இரத்தானது.
முன்னதாக, கேரளாவின் காங்கிரசு முதல்வர் சதீஷன் பதவியேற்கும் விழாவில் விஜய் பங்கேற்பதாக இருந்த
திட்டம் திடீரென இரத்தானது.இப்போது தில்லியில் காங்கிரசு தலைவர்களை விஜய் சந்திக்க இருந்த திட்டமும்
இரத்தானது இது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான சூழலில் நேற்று காலை 10 மணியளவில் தில்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு தனி விமானத்தில் விஜய் சென்னை திரும்பினார்.
காவிரி விவகாரம் மற்றும் தமிழகத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எழுந்த குதிரைபேர சர்ச்சைகள் போன்றவற்றால் இப்போது காங்கிரசுத் தலைவர்களைச் சந்தித்தால் அது தேவையற்ற விவாதங்களை உருவாக்கும் என்பதால் விஜய் இந்தச் சந்திப்பைத் தவிர்த்ததாக ஒருதரப்பில் கூறப்படுகிறது.காங்கிரசு தலைவர்களுடனான
சந்திப்பு நடைபெறாததற்கு பின்னணியில் சில அரசியல் அழுத்தங்களும் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.அதாவது காங்கிரசு தலைவர்களைச் சந்திக்கக் கூடாது என்று விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுத்ததால் அவர் சந்திப்பை இரத்து செய்தார் என்று சொல்லப்படுகிறது.
இன்னொரு புறம் இதற்குக் காரணம் என்ன? என்பது குறித்து காங்கிரசு பாமஉ கிறிஸ்டோபர் திலக் கூறியதாவது….
இதனை தமிழக முதல்வர் ஒரு அரசுமுறைப் பயணமாக மட்டுமே வைத்திருக்க விரும்பியிருக்கலாம்.அதனால்தான் பிரதமரை மட்டும் சந்தித்துவிட்டுத் திரும்பியுள்ளார்.ஜூன் 11 ஆம் தேதி முதல்வர் மீண்டும் டெல்லி வரவுள்ளார். அப்போது நிச்சயமாக சோனியா,இராகுலைச் சந்திப்பார்.
தற்போது ஜார்கண்ட் மாநிலங்களவை சீட்,கர்நாடகாவில் முதல்வர் தேர்வு உள்ளிட்ட விசயங்கள் குறித்து
விவாதிப்பதற்காக அந்த மாநில காங்கிரசு தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர்.கடந்த இரண்டு நாட்களாக இந்த விவாதங்கள் சோனியா இல்லத்தில் தீவிரமாக நடந்து வருவதால்,தமிழக முதல்வருடன் விரிவாக அமர்ந்து பேசுவதற்கான நேரமும் வாய்ப்பும் காங்கிரசு தலைவர்களுக்குக் குறைவாக இருந்தது.இதில் யோசிப்பதற்கோ
அல்லது எதிர்மறையாக நினைப்பதற்கோ எதுவும் இல்லை.நாங்கள் தவெக கூட்டணியில் நீடிக்கிறோம்,
அமைச்சரவையிலும் இருக்கிறோம்.
எனவே,நாங்கள் சந்திப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை.விஜய் முதல்வராக பதவியேற்றபோது இராகுல்தான்
முதல்ஆளாக வந்து பங்கேற்றார்.சோனியா காந்தி இல்லத்தில் முதல்வருக்கு விருந்து கொடுக்கத்
திட்டமிடப்பட்டிருக்கலாம்.ஆனால்,காங்கிரசு தலைமை சில முக்கிய உள்கட்சி முடிவுகளை
எடுக்கவேண்டியிருந்ததால்,அது அடுத்த முறைக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவர் இவ்வாறு கூறியிருப்பதன் மூலம்,விஜய் சந்திப்பைத் தவிர்த்தது இராகுல்தான் என்று தெரியவந்திருக்கிறது.விஜய் காங்கிரசு தயவில் ஆட்சி அமைத்திருந்தாலும் நடைமுறையில் பாஜக பக்கம் இருக்கிறார் என்பது தெரிய வந்திருப்பதாலேயே அவர் விஜய் சந்திப்பை இரத்து செய்தார் என்று சொல்லப்படுகிறது.


