
சென்னை தலைமைச் செயலகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் ரமேஷ் கூறியதாவது….
ரூ.100 கோடி மதிப்பிலான பழநி கோயில் நிலம் முறைகேடாக பதிவாகியுள்ளதாக தவறான நோக்கத்துடன் செய்தி பரப்புகின்றனர்.
பழநி கோயிலின் தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான நிலத்தை யாருக்கும் பதிவு செய்யக்கூடாது என கோயில் இணைஆணையர் மூலம் பதிவுத்துறைக்கு பலமுறை கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.கடந்த மார்ச் 27 இல் அந்த நிலத்தைப் பதிவு செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது.
ஆனால்,அப்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த நிலத்தைப் பதிவு செய்யமுடியாது எனக்கூறி,ஏப்ரல் 1 ஆம் தேதி விளக்கக் கடிதம் கொடுத்துள்ளார்.இதையடுத்து நிலத்தைப் பதிவுசெய்ய முயன்றவர்கள் அந்தக் கடிதத்தை வைத்து நீதிமன்றம் சென்றுள்ளனர்.ஆவணங்கள் சரிவர இருந்தால் நிலத்தைப் பதிவு செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.அந்தத் தீர்ப்பை வைத்து ஜூலை 3 ஆம் தேதி நிலத்தைப் பதிவுசெய்ய முயற்சிக்கின்றனர்.
அதற்கு ஒருநாள் முன்பு, ஜூலை 2 ஆம் தேதியே பழனி கோயில் இணை ஆணையர் அந்த நிலத்தை தனியாருக்கு பதிவுசெய்யக்கூடாது என்று மாவட்டப் பதிவாளருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.சார்பதிவாளர் பணியில் இருந்தவர் விடுப்பில் சென்றதால் ஜூலை 6 ஆம் தேதி கூடுதல் பொறுப்பாக ஜஸ்டின் மணிகண்டன் சார்பதிவாளர் பொறுப்புக்கு வருகிறார்.அவருக்கு அந்த நிலம் குறித்த தகவல் சரிவர தெரியாததால் அதை ஜூலை 6 ஆம் தேதி பதிவுசெய்து கொடுத்துவிடுகிறார்.
இந்தத் தகவல் தெரிந்தவுடன் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை,பதிவுத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அரசு மீண்டும் அந்த இடத்தை கைப்பற்றும்.நிலத்தைப் பதிவு செய்த சார்பதிவாளர் இடைநீக்கம் செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் மீது எப்படியாவது ஊழல் கறை சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.நிலத்தை வாங்கியவர்,பதிவு செய்த சார்பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
அதேபோல்,அந்த நிலத்தை வாங்கியவர் எனது உறவினர் எனவும் தகவல் பரப்பப்படுகிறது.இதுமுழுவதும் தவறான தகவலாகும்.பொய் பரப்பியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளேன்.கோயில் நிலங்களை ஒரு இஞ்ச் கூட யாருக்கும் தர நாங்கள் தயாரில்லை.
அதேபோல்,கரூரில் கோயில் நிலம் தாரை வார்க்கப்பட்டதாகக் கூறுவதும் தவறு.1963-67 இனாம் ஒழிப்பு சட்டத்தின்படி பட்டா பெற்று,60 ஆண்டுகளாக வசிக்கும் மக்களின் நிலங்களை விற்க விதிக்கப்பட்டிருந்த தடையை மட்டுமே அரசு தற்போது நீக்கியுள்ளது.அங்கு யாருக்கும் புதிதாக பட்டா வழங்கவில்லை.கோயில் நிலங்களை பாதுகாப்பதில் அரசு தீவிரமாக உள்ளது.ஆனால்,அரசு பட்டா வழங்கியும் கரூரில் நிலத்தை விற்க முடியாவிட்டால் அந்த மக்களுக்கு ஆதரவு அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறும்போது…
பழநி கோயில் நிலம் விவகாரத்தில் தவறு நடைபெற்றுள்ளது.சார்பதிவாளர் தவறு செய்ததால்தான் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே பதிவு செய்ததாக சார்பதிவாளர் கூறினார்.
அந்தப் பதிவை தற்போது நிறுத்தி வைத்துள்ளோம்.இந்த விவகாரத்தில் உயரதிகாரிகளுக்கு தொடர்பிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும்,முதல்வர் அனுமதிபெற்று தேவையெனில் உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றார்.
பழநி கோயில் நிலச் சிக்கலில் தப்பு நடந்துள்ளது என இரண்டு அமைச்சர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


