2021 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க. அரசு அமைந்த பின்னர், இந்தத் திட்டம் எப்போது தொடங்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு இல்லத்தரசிகள் மத்தியில் அதிகரித்தது.
தமிழ்நாடு அரசு 2023-24 ஆம் ஆண்டு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், இந்தத் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தத் திட்டத்தை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டு வருவது? என்பது பற்றிய முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் அமைந்துள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டார்.
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உதயச்சந்திரன், ககன்தீப் சிங் பேடி உள்பட அரசு துறை உயர் அதிகாரிகளும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்டஆட்சியர்கள் நேரடியாகக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம் மதியம் 3 மணிக்குத் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விரிவாகத் தெரிவித்தார். இத்திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று பெயர் சூட்டினார்.
இந்தநிலையில் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்…..
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டதிற்கு பொது விநியோக நியாயவிலைக் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
குடும்பத் தலைவி வரையறை குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர். ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.
குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.
திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்களின் ஆண்டு வருமானம் ரூ.2½ இலட்சத்துக்குக் கீழ் இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கு குறைவாக நஞ்சை நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புஞ்சை நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3 ஆயிரத்து 600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.
பொருளாதாரத் தகுதிகளுக்காக தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை. தகுதி இல்லாதவர்கள் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் ஆண்டுக்கு ரூ.2½ இலட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டினால் உரிமைத்தொகை பெற இயலாது. அதேபோன்று ஆண்டு வருமானமாக ரூ.2½ இலட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி மற்றும் தொழில் வரி செலுத்துவர்களும் விண்ணப்பிக்க இயலாது.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் இதில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர) அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள்., சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உரிமைத்தொகை பெற முடியாது.
சொந்தப்பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், ஆண்டுக்கு 50 இலட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினரும் விண்ணப்பிக்க இயலாது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். இவர்கள் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லையெனில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவார்கள்.
இவ்வாறு வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.