இராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் – காங்கிரசு பெருவெற்றி

இராஜஸ்தான் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்காக 2,622 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. மொத்தம் 14.32 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பதிவு செய்தனர். 7,249 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். இந்தத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் மொத்தம் உள்ள 1,775 வார்டு கவுன்சிலர் பதவிகளில் ஆளும் காங்கிரசு 620 இடங்களிலும், பாசக 548 இடங்களிலும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 595 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர்.

இராஜஸ்தானின் 12 மாவட்டங்களில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஏழு வேட்பாளர்கள், சிபிஐ மற்றும் சிபிஐ (எம்) தலா இரண்டு மற்றும் ராஷ்டிரீய லோகாந்த்ரிக் கட்சி (ஆர்எல்பி) ஒருவர் வெற்றி பெற்றதாக மாநிலத் தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் அறிவித்து உள்ளார்.

இந்த உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று 14 ஆம் தேதி வெளியிடப்படும். தலைவர் பதவிக்கான வாக்களிப்பு டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடத்தப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Response