ஐநா சபையில் வைகோவுக்கு மீண்டும் அச்சுறுத்தல்


தமிழக மீனவர்கள் குறித்தும்,
தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் குறித்தும்

வைகோ உரை

ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில், இன்று செப்டெம்பர் 28 ஆம் தேதி, தமிழ் உலகம் அமைப்பின் சார்பில் வைகோ அவர்கள் ஆற்றிய உரை:-

தலைவர் அவர்களே வாய்ப்புக்கு நன்றி,

இந்தியாவில் தமிழ்நாட்டு மீனவர்கள் பாக் நீரிணையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மீன்பிடித் தொழிலைச் செய்கின்ற உரிமை உள்ளவர்கள் ஆவர். ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக இலங்கைக் கடற்படை, ஈவு இரக்கம் இன்றித் தமிழக மீனவர்களைத் தாக்கி வருகின்றது. இதுவரை 578 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். 2011 ஏப்ரல் 2 ஆம் தேதியன்று ஒரு கோரமான படுகொலை நடைபெற்றது.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை, இந்திய அணி தோற்கடித்ததால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த விக்டஸ், அந்தோணிராஜ், ஜான் பால், மாரிமுத்து ஆகிய நான்கு மீனவர்களைக் கைது செய்து, அவர்களைக் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிச்சிதைத்துக் கொலை செய்து, உடல்களைக் கடலில் வீசி எறிந்தனர். தமிழர்கள் மீனவர்கள் படகுகளை உடைத்தல், மீனவர்களை கைது செய்து சிங்களச் சிறைகளில் அடைத்தல் அன்றாட வழக்கமாகிவிட்டது.

தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து இந்திய அரசு கவலைப்படவில்லை.

இலங்கைத் தீவில் சிங்கள அரசால் நடத்தப்படும் தமிழ் இனப்படுகொலையால் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளனர். உலகத்தில் மற்ற நாடுகளில் இப்படி அகதிகளாகச் செல்கின்றவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மிகுந்த வசதிகளையும், ஆறுதலையும் செய்து வருகிறது. ஆனால், அத்தகைய உதவிகளை ஐ.நா. மன்றம் தமிழ் நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்குச் செய்யவில்லை என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறேன்.

இலங்கை அரசு இராணுவத்தின் மூலம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலைக் குற்றம் செய்துள்ளது. இந்த இனக்கொலைக்குக் காரணமான அன்றைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும், அன்றைய இராணுவ அமைச்சர் மைத்ரிபால சிறிசேனாவும் அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

எனவே மனித மனித உரிமை ஆணையர் அல்ராத் உசேன் அவர்களும், ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் அவர்களும் இலங்கைத் தீவுக்கு நேரடியாகச் சென்று, குறிப்பாக ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று, நடத்தப்பட்ட கோரமான இனப்படுகொலையை விசாரித்து, இன்றைய நிலைமையையும் கண்காணித்து அறிந்து, சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்களுக்குப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நியாயத்தைக் கருதி அதற்கு ஏற்பாடு செய்ய முன்வர வேண்டுகிறேன் என்றார்,

சிங்கள அரசின் சார்பில் மனித உரிமைகள் கவுன்சிலில் பேசியவர்கள், விடுதலைப்புலிகள் இலட்சக்கணக்கான மக்களைக் கொன்ற பயங்கரவாதிகள். இந்தக் குற்றத்திற்கு, விடுதலைப்புலிகளை ஆதரித்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் பொறுப்பு ஏற்க வேண்டும். கைகளில் இரத்தக்கறை படிந்துள்ள தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இங்கே வந்து மனித உரிமைகளைப் பற்றிப் பேசக் கூடாது என்றனர்.

இன்னொரு சிங்களப் பிரதிநிதி பேசும்போது,

ஐ.நா. சபை இலங்கைப் போர் குறித்து விசாரணைக் குழு அமைத்ததே தவறு ஆகும். இதை ரஷ்யா எதிர்த்தது. இலங்கைப் போர்க்குற்ற விசாரணையை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எதிர்த்தன. விடுதலைப் புலிகள் பெற முடியாததை, அவர்கள் அழிந்தபிறகு புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல்வாதிகளும் மனித உரிமைகளைப் பேசி தனிநாடு அமைக்க முயல்கின்றார்கள். இதனை அனுமதிக்கக்கூடாது என்று சொன்னார்.

இன்றும் வைகோவைச் சுற்றிலும் ஏழு சிங்களர்கள் அமர்ந்து கொண்டார்கள்.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
28.09.2017

Leave a Response