என்னை அறிந்தால் – திரைப்பட விமர்சனம்

அஜித் பலவிதத் தோற்றங்களில் இருக்கிறார். கதைப்படி, குறைந்த வயதில் இருக்கும்போது குண்டாகத் தெரிகிறார். அதிக வயதாகும்போது எடை குறைந்து காணப்படுகிறார். தாடியுடன் கொஞ்சநேரம், தாடியில்லாமல் கொஞ்ச நேரம் என்று விதவிதமாக வருகிறார். இவற்றால் கதைக்கு எந்தவகையிலும் பயனில்லை. கோட்டுக்கு இந்தப்பக்கம் இருந்தா நல்லவன் அந்தப்பக்கம் போனா ரொம்பக்கெட்டவன் என்பது உட்பட நிறையத் தத்துவங்களைப் பேசுகிறார். பாடல் காட்சிகளில் நடனமாடச் சிரமப்படுகிறார்.
த்ரிஷா கொஞ்நேரம்தான் வருகிறார். கூடுதல் ஒப்பனை அவருக்குப் பொருத்தமாக இல்லை. இதே கௌதம்மேனனின் விண்ணைத்தாண்டிவருவாயா படத்தில்தான் அவர் மிகஅழகாக இருந்தார். இந்தப்படத்தில் நேரெதிராக இருக்கிறார்.
அனுஷ்கா அவருடைய வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். துணிச்சலான பெண் என்று சொல்லிவிடுவதால், தன்னைக் கொல்லத்தான் அந்தக்கூட்டம் வந்தது என்று தெரியும்போது எவ்வித அதிர்ச்சியும் காட்டாமல் கேட்டுக்கொள்கிறார். வில்லன்களிடம் சிக்கியிருக்கிற குழந்தையையும் காப்பாற்றவேண்டும் வில்லன்களிடம் சிக்கிவிடாமல் அனுஷ்காவையும் பாதுகாக்கவேண்டும் என்று அஜித் போராடுகிற நேரம், ஒரு கட்டத்தில் அனுஷ்காவை வில்லன்களோடு அனுப்பினால்தான் குழந்தை பாதுகாப்பாகக் கிடைக்கும் எனும் நிலை. அப்போது கம்பீரமாகத் தானே போய் வில்லனின் வண்டியில் ஏறிக்கொண்டே உங்கள் வருகைக்காகக் காத்திருப்பேன் என்று அஜித்திடம் சொல்லுகிற இடத்தில் சிறப்பாகச் செய்திருக்கிறார் அனுஷ்கா.
படத்தில் முக்கியவில்லனாக நடித்திருக்கும் அருண்விஜய், அஜித்தைவிட நல்ல உடல்கட்டுன் இருக்கிறார். அஜித்தைவிட நன்றாகச் சண்டை போடுகிறார். இந்தப்படம் அருக்குத்தான் பெரியபலமாக அமையும் என்று சொல்லலாம். கடைசியில் குழந்தையையும் காப்பாற்றி, அனுஷ்காவையும் பாதுகாத்துவிடுகிறார் அஜித். அதன்பிறகு சுமார் பதினைந்துநிமிடங்களுக்கு ஒடுகிற படம் மொத்தமும் அருண்விஜய்க்காகவே என்று சொல்லலாம். கடைசியாக வந்து அஜித்தோடு கத்திச் சண்டைபோட்டுச் செத்துப்போகிறார். ஏனெனில் கதையில் அவர் வில்லன்தானே? அஜித் போன்ற ஒரு கதாநாயகனை வைத்துக்கொண்டு வில்லன் வெற்றி பெற்றுவிட முடியுமா என்ன?
பாடல்கள் படத்துக்குப் பலமாக அமையவில்லை, பின்னணிஇசை தாழ்வில்லை. ஹாரிஸ்ஜெயராஜின் அடையாளம் எங்குமே தென்படவில்லை.
ஒரு குழந்தைபெற்ற பெண்ணைக் கதாநாயகன் காதலிக்கிறார் என்பதை வேட்டையாடுவிளையாடு படத்திலேயே சொல்லிவிட்ட கௌதம்மேனன் இந்தப்படத்திலும் அதேபோலச் சொல்லியிருப்பது ஏனென்று புரியவில்லை. இப்படிப் பல குறைகள் சொல்லலாம். இந்தப்படத்தைப் பார்க்கும்போது கௌதம்மேனனின் சரக்கு சுத்தமாகத் தீர்ந்துவிட்டது என்று மட்டும் புரிகிறது.

Leave a Response