
சாய்ரமணி இயக்கத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள மொட்டசிவா கெட்டசிவா படம், ஒரு தெலுங்குப்படத்தின் மொழிமாற்று.
நிறையப் படங்களில் பார்த்தது போலவே தொடக்கத்தில் கெட்ட போலிஸாகவும் பாதிக்கு மேல் நல்ல போலீஸ் என்கிற பெயரில் கேடுகெட்ட போலீஸாகவும் நடித்திருக்கிறார் ராகவா.
படத்தின் நாயகி நிக்கிகல்ராணி சன் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றுகிறார்.
இதனால் காவல்துறை ஊடகம் ஆகிய இரு துறைகளையும் அளவுக்கதிகமாகவே கேவலப்படுத்தியிருக்கிறார்கள். (சன் தொலைக்காட்சி இதை எப்படி ஒப்புக்கொண்டது?)
கதைக்கு அவசியமே இல்லாமல் இஸ்லாமியர்களைப் பயன்படுத்துவது, பார்வையாளர்கள் பரிதாபப்படவேண்டுமென்பதற்காகவே மாற்றுத்திறனாளிகளைப் பயன்படுத்துவது ஆகிய கொடுமைகளும் படத்தில் இருக்கின்றன.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இவ்வாண்டு தொடக்கத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தப்பட்ட தைப்புரட்சி என்றழைக்கப்படுகிற மெரினா போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமான காட்சிகளும் படத்தில் இருக்கின்றன.
படத்தின் வில்லன், கைதான தன் தம்பியை வெளியே எடுப்பதற்காக, நம்ம லிங்க்ல உள்ள ஸ்டூலண்ட்ஸ தூண்டிவிடு, சென்னையே பற்றி எரியணும் என்கிறார். உடனே மாணவர் போராட்டம் நடக்கிறது. அதை புத்திசாலித்தனமாக எதிர்கொள்வதாக நினைத்து, போராடும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து போராட்டத்தைக் கலைக்கிறார். அதிலும் அந்தத் தாய்களை பறந்து பற்ந்து அடிக்க வைத்து கேலிப்பொருளாக்கியிருக்கிறார்.
மாணவர் போராட்டத்தின்போது காட்டிக்கொடுத்தது போதாதென்று படத்திலும் கேவலப்படுத்துவதா? என்று படம் பார்க்கிற பொதுவானவர்களே சொல்கிற மாதிரி படமெடுத்திருக்கிறார்கள்.


