
தேர்தல் தோல்வி காரணமாக அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது.எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஓர் அணி செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.அதனால், அவர் மற்றும் அவரது அணியினரின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதவிகளில் தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விசுவநாதன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது….
அதிமுக இன்று தனிப்பட்ட சுயலாபத்துக்காகவும்,பதவி வெறிக்காகவும் செயல்படும் ஒரு சிலரால் இந்த எஃகுக் கோட்டையின் அடித்தளம் அசைத்துப் பார்க்கப்படுகிறது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்தது.
அதைத்தொடர்ந்து,பெரும்பான்மையான சட்டப்பேரவை உறுப்பினர்களும்,முக்கிய நிர்வாகிகளும் பொதுச்செயலாளர் பழனிசாமியைச் சந்தித்து,அவரது தன்னிச்சையான முடிவுகளால்தான் இந்தத்தோல்வி நேர்ந்தது என்று கூறி, தோல்விக்கான காரணத்தை ஆராய அவசர பொதுக்குழு மற்றும் செயற்குழுவைக் கூட்ட வலியுறுத்தினோம்.
முக்கியமாக திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றும் வலியுறுத்தினோம்.
இதற்கு பொதுச்செயலாளர் உடன்படாததால் கருத்து வேறுபாடு தொடங்கியது.கடந்த 11 ஆம் தேதி அன்று
பழனிச்சாமி, தற்காலிக பேரவைத் தலைவரைச் சந்தித்து 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக மனு அளித்ததன் மூலம் இந்தப்பிளவு பொதுவெளியில் தெரிந்தது.அதனால்,30 உறுப்பினர்கள் எங்கள் தரப்பு ஆதரவுக் கடிதத்தை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக,கட்சியின் முன்னோடிகள் உள்ளிட்ட 28 பேரை ஒரே கையெழுத்தில் நீக்கி பழனிச்சாமி
அறிவித்துள்ளார்.தேர்தல் ஆணைய மற்றும் நீதிமன்ற சட்டப்படி,ஒரு இயக்கத்தில் பிளவு ஏற்பட்ட நிலையில்,
ஒருவரை நீக்கவோ அல்லது சேர்க்கவோ இரு பிரிவினருக்கும் அதிகாரம் கிடையாது.
2017 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற அறிவிப்புகள் செல்லாது என்று நீதிமன்றத்தாலும்,தேர்தல் ஆணையத்தாலும் அறிவிக்கப்பட்டது.எனவே,பழனிச்சாமி வெளியிட்ட பதவி நீக்க அறிவிப்புகள் செல்லாது.நீக்கப்பட்டவர்கள்,அவர்கள் வகித்த அதே பொறுப்புகளில் தொடர்வார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்பின், எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது….
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,உண்மை நிலையை இந்தநேரத்திலும் உணராமல் அறிக்கை
விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும்
ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம்.ஆனால் தோல்வி வந்த பிறகு,தலைமைப் பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும்.அதை விடுத்து எப்போதும்போல ‘நான் மட்டுமே எல்லாம்’ என்ற நிலையில் பேசிக்கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
மக்கள் ஆதரவு பெற்ற தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு அதிமுகவின் ஆதரவை பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர,யாரையும் அவமரியாதை செய்யும்
எண்ணமோ,அதிமுகவை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை.இப்போதும் நீங்கள் அழைத்தால்,
பேச நாங்கள் தயார்.
தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம்.அதிமுகவின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம்.தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்றுதான். ‘போங்க போங்க’ என்று எப்போதும் போல விரட்டியடிக்காமல்,‘வாங்க வாங்க’ என்று ஒருமுறை அழைத்துப் பாருங்கள்.எல்லாமே மாறும்.கட்சியும் நல்லா இருக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திடீரென எஸ்.பி.வேலுமணி இறங்கிவந்து அறிக்கை விடக்காரணம்,அவர்கள் அணிக்குள்ளேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதுதான் என்று கூறப்படுகிறது.
யார் யாருக்கு அமைச்சர் பதவி? என்பதில் பெரும் சிக்கல் எழுந்திருப்பதாகவும் அதனால் எஸ்.பி.வேலுமணி அணியிலிருந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீண்டும் எடப்பாடி பக்கம் சாய்ந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த மாவட்டச் செயலாளருக்கு கே.சி.வீரமணி ஆதரவு தெரிவித்துள்ளார். புதிய மாவட்டச் செயலாளருக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார். நேற்றுவரை எஸ்.பி.வேலுமணியுடன் இருந்தேன்;இன்று எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன்.எடப்பாடி பழனிச்சாமிதான் பொதுச்செயலாளர்;அவர் பின்னாலே பயணிப்போம்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அனைவரும் பயணிக்க வேண்டும் என்றும் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.
இதற்குக் காரணம் பதவிப் பகிர்வில் வந்த சிக்கல்தான் என்று சொல்லப்படுகிறது.அதனாலேயே எஸ்.பி.வேலுமணி இறங்கி வந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.


