
அமெரிக்கா ஈரான் போர் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய ஒன்றியத்தைச் சுற்றி இருக்கக்கூடிய பல்வேறு அண்டை நாடுகளும் பலமடங்கு பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்தி இருக்கின்றன.கிட்டத்தட்ட இரண்டுமாத காலமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய சூழலில் இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தவில்லை.
எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நட்டத்தில் செயல்பட்டு வரக்கூடிய சூழலில் எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல் ,டீசல் விலைகள் உயர்த்தப்படலாம் என அஞ்சப்பட்டது.
இத்தகைய சூழலில், பிரதமர் நரேந்திரமோடி பொதுமக்கள் பெட்ரோல்,டீசலை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் முடிந்த அளவு பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதுமட்டும் இல்லாமல் முடிந்த அளவு மக்கள் வீடுகளில் இருந்தே வேலை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பள்ளிகள் கூட இணைய வகுப்புகளுக்கு மாறவேண்டும் என்றும் கொரோனா காலத்தைப் போன்ற கட்டுப்பாடுகளுக்கு மக்கள் திரும்பினால் நாட்டில் பாதகமான விளைவுகள் ஏற்படுவது குறையும் என பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். மேலும் பொதுமக்கள் அடுத்த ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்கவேண்டாம் என்ற கோரிக்கையும் அவர் முன் வைத்திருந்தார்.
இதனால் இந்தியாவின் கொரோனா காலத்தைப் போல ஊரடங்கு போடப்படுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்தது.
இந்தச் சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி, மேற்காசிய மோதல்களால் இந்திய நிதி நிலைமை பாதிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் மக்கள் சிக்கனமாக இருக்கவேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நரேந்திரமோடி முன்வைத்ததாகத் தெரிவித்தார்.
ஈரான் போர் தொடங்குவதற்கு முன்னர் இந்தியாவில் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி என்பது 35,000 டன்களாக இருந்தது அது தற்போது ஒரு நாளைக்கு 54,000 டன்கள் என உயர்த்தப்பட்டு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.நாட்டின் எந்தப் பகுதியிலுமே எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை எனக் குறிப்பிட்டிருக்கும் அவர் விரைவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதை சூசகமாக தெரிவித்து இருந்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவே இல்லை எனச் சொல்லி, இதற்காக விலை உயரப்போகிறது என நான் கூறவில்லை. ஆனால் பெட்ரோல் டீசல் விலைகளுக்கும் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.
இந்தியாவில் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது, அதேபோல 45 நாட்களுக்கு தேவையான எரிவாயு கையிருப்பு இருக்கிறது என்பதால் மக்கள் பதற்றம் அடையவேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
எண்ணெய் நிறுவனங்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் கோடி ரூபாய்வரை நட்டத்தைச் சந்திப்பதாகக் குறிப்பிட்ட அவர் கடந்த ஆண்டு முழுவதும் எண்ணெய் நிறுவனங்கள் பெற்ற இலாபம் அனைத்துமே இந்த இரண்டு மாதங்களிலேயே காணாமல் போய்விட்டது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்தப்போர் நீடிக்கும் பட்சத்தில் நாம் சிக்கனமாக இருக்க வேண்டியிருக்கும் என்பதைதான் முன்கூட்டியே தெரிவித்திருப்பதாக கூறும் அமைச்சர் எவ்வளவு நாட்கள்தான் எண்ணெய் நிறுவனங்களால் இந்த நட்டத்தை ஏற்றுக கொண்டிருக்க முடியும் எனக் கேட்டிருந்தார்.
இந்தக் கேள்வியெல்லாம் விலை ஏற்றம் வருவதற்கு முன்னோட்டம் என்கிற பொதுமக்களின் அச்சத்தை உறுதிப்படுத்தும்விதமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருருக்கு ரூ.3.11 உயர்ந்துள்ளது. விலை உயர்வை அடுத்து சென்னையில் பெட்ரோல், விலை ஒரு லிட்டர் ரூ. 103.98க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.95.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல்,ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளை மூடவும் உத்தரவிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
பிரதமரும் பெட்ரோலிய அமைச்சரும் பேசியதன் உண்மையான அர்த்தம் தெரிந்துவிட்டது.
– முருகன்


