
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள்
தவெகவுக்குக் கிடைக்கவில்லை.
தவிர, பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய் இதில் ஏதேனும் ஒரு
தொகுதியில் பதவி விலகவேண்டும். இதனால், தவெக பலம் 107 ஆகக் குறையும். இந்தச் சூழலில்,
பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 11 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதால், அதிமுகவுடன் தவெக தரப்பு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.இதற்கு எடப்பாடி பழனிச்சாமி உடன்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதனால், அதிமுகவில் இருந்து 20 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு அளிப்பார்களா? என்று
எஸ்.பி.வேலுமணியிடமும், பின்னர் சி.வி.சண்முகத்திடமும் செங்கோட்டையன் தரப்பில் பேச்சுவார்த்தை
நடந்ததாகக் கூறப்படுகிறது.அமைச்சர் பதவி வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்ததாகத் தெரிகிறது.
இதையறிந்த எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.அதிமுக
சார்பாகவே நேரடியாக தவெகவுக்கு ஆதரவு தரலாம் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் கட்சியின் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி இன்று கூட்டியுள்ளார். தவெகவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக இக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்தச் சூழலில்,திருச்சி லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற
லீமா ரோஸ் மார்ட்டின் சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் லீமா ரோஸ் கூறியதாவது….
லால்குடியில் நான் (அதிமுக), வில்லிவாக்கத்தில் எனது மருமகன் ஆதவ் அர்ஜுனா (தவெக), புதுச்சேரி
காமராஜ் நகரில் எனது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் (லஜக) என்று ஒரே குடும்பத்தில் 3 பேர் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியிருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
இது இறைவன் கொடுத்த பரிசு ஆகும்.எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.இது எங்களுக்கு இன்பஅதிர்ச்சியாக அமைந்துள்ளது.தவெகவுக்கு பெரும்பான்மை
இல்லாததால்,ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக – தவெக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில்,எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த வேதாரண்யம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டியில்….
தமிழ்நாட்டில் அதிமுகதான் பெரிய கட்சி.இந்தச் சூழலில் தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது என்றார்.
ஒரேநேரத்தில்,ஒரேகட்சியைச் சேர்ந்தவர்களால் இப்படி நேரெதிரான கருத்துகள் சொல்லப்பட்டிருப்பதால் அதிமுக வட்டாரங்களில் பெரும் குழப்பம் நிலவுகிறது.


