100 கோடி வருமானத்தைக் குறைத்துக் காட்டிய விஜய் – நீதிமன்றம் உத்தரவு

ஏப்ரல் 23 அன்று நடக்கவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

இரு தொகுதிகளிலும் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக் கணக்கை மறைத்துள்ளதாகவும் கூறி, வியாசர்பாடியைச் சேர்ந்த பெரம்பூர் வாக்காளரான விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது சொத்து மதிப்பு, 115 கோடியே 13 இலட்சத்து 63 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில், 220 கோடியே 15 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பை விட, பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைவாகக் காட்டியது உண்மைத் தகவலை மறைத்ததற்குச் சமம் என்பதால், விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் முழுமையானவையா, உண்மையானவையா என விசாரிக்க, வருமானவரித் துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஜே.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தவர்,ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய்வரை குறைத்துக் காட்டியது முறைகேடானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி வருமானவரித் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இது விஜய்க்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதென அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response