
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா,சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆன பிறகு அதிமுகவை மீட்டெடுக்கப் போவதாகச் சொல்லி வருகிறார்.அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் சசிகலா.ஆனால்,எடப்பாடி பழனிச்சாமியின் விடாப்பிடியான எதிர்ப்பு முட்டுக்கட்டையாக இருக்கிறது.
அதனால்,அந்த முயற்சிகள் கைகூடவில்லை.தென்மாவட்ட சுற்றுப்பயணம் உள்ளிட்ட அவரது முயற்சிகள் பெரிய அளவில் எடுபடவில்லை.மேலும் சசிகலாவுக்கு எதிராக நடக்கும் உள்ளடி வேலைகள் ஒவ்வொன்றும் அவருக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், தற்போது அவர் எடுத்துள்ள முடிவு அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியுள்ளார்.அதில் பலரும் சசிகலா சட்டசபைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், புதியகட்சி தொடங்குவது குறித்தும் சசிகலா ஆலோசித்தாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில்,மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் சசிகலா போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. அதற்கான பணிகளை அவர்கள் தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் ஒதுங்கியிருந்த சசிகலா, இம்முறை அதிரடி பாய்ச்சல் நிகழ்த்தவுள்ளார் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இது தமிழ்நாடு அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா இப்படி அதிரடியாகக் களமிறங்குவார் என்று சற்றும் எதிர்பார்க்காத தில்லி பாஜகவும் எடப்பாடி பழனிச்சாமியும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.


