
கடலூர் முதுநகர் அருகே பள்ளி வாகனம் மீது தொடர்வண்டி மோதிய கோர விபத்தில் அக்கா, தம்பி உட்பட 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த ஓட்டுநர் உள்பட மேலும் 2 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக ரயில்வே கேட்டை மூடாமல் தூங்கிய கேட் கீப்பரை கைது செய்து உள்ளனர்.
கேட் கீப்பர் பங்கஜ் சர்மா அடிக்கடி கேட்டை பூட்டிவிட்டு ரயில் வரும் வரை கடைக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதேபோல கேட்டை பூட்டிவிட்டு செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டே இருப்பார். நேற்று அவர் கேட்டை பூட்டாமல் தூங்கியதால் விபத்து நடந்துள்ளது.
பங்கஜ் சர்மா மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்குத் தமிழ் தெரியாது. எனவே தமிழகத்தில் உள்ள ரயில்வே கேட்களில் தமிழ் தெரிந்தவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என அப்பகுதிமக்கள் கூறினர்.
இதையொட்டி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
கடலூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொடர்வண்டி காவலரண் ஊழியரின் அலட்சியத்தால் பள்ளி வாகனம் மீது திருச்செந்தூரிலிருந்து வந்து கொண்டிருந்த தொடர்வண்டி மோதிய விபத்தில் ஏதுமறியா மூன்று பள்ளிக் குழந்தைகள் பலியான பெருந்துயர நிகழ்வு அதிர்ச்சியும், மனவலியும் தருகிறது.
வடமாநிலத்தைச் சேர்ந்த தொடர்வண்டி ஊழியரின் கவனக்குறைவு எத்தனை பேரிழப்பை ஏற்படுத்திவிட்டது என்பதை எண்ணும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. ஈடுசெய்யவே முடியாத பேரிழப்பைச் சந்தித்து பெருந்துயரக்கடலில் சிக்கித்தவிக்கும் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரைப் பகிர்ந்து கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
மொழி புரியாத வடமாநிலத்தவரை தமிழ்நாட்டில் காவலரண் ஊழியராக பணிபுரிய அனுமதித்ததன் விளைவே 3 குழந்தைகள் பலியாக முதன்மைக் காரணமாகும்.
தமிழர்களை இந்தி கற்கச்சொல்லி திணிப்பதில் காட்டும் அதிகாரத்தையும், ஆர்வத்தையும் தமிழ்நாட்டில் பணிபுரிய வரும் வடமாநிலத்தவருக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் ஏன் இந்திய ஒன்றிய அரசு காட்டுவதில்லை? தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் பணிவாய்ப்பு என்பது உரிமைப் பாதுகாப்பு முழக்கம் மட்டுமன்று; உயிர் பாதுகாப்பு முழக்கமுமாகும். அதனை கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவே தற்போது 3 குழந்தைகள் பலியான துயரம் நிகழ்ந்தேறியுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இதுபோன்ற கொடுமைகள் இனி எங்கும் நிகழாதவாறு தடுக்க இனியேனும் அந்தந்த மாநிலங்களில் அம்மண்ணின் மக்களை மட்டுமே பணியமர்த்த ஒன்றியஅரசு உடனடியாக உத்தரவிட வேண்டுமென இந்திய ஒன்றியஅரசினை வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்த 3 குழந்தைகளுக்கும் என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


