
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே அனுமதியளித்து, முக்கிய தீர்ப்பை வழங்கியது.
இதை முன்னெடுத்த தமிழ்நாடு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கல்வியாளர்கள் சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
‘மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு’ என்ற தலைப்பில் நடந்த விழாவுக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற இசை, கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் கண்டு இரசித்தார். பின்னர் மேடையேறிய முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு, செங்கோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. விருந்தினர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு தலைவரும், ஆர்எம்கே கல்விக் குழும நிறுவனத் தலைவருமான ஆர்.எஸ்.முனிரத்தினம் வரவேற்புரை ஆற்றினார். விழாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் முன்னிலை வகித்தார்.
ஏற்புரை நிகழ்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது…..
பாராட்டு விழா அழைப்பிதழில் ‘சுயாட்சி நாயகர்’ என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது உண்மையில் நான் அல்ல. அது தமிழ்நாட்டு மக்களைத்தான் குறிக்கிறது. திமுவுக்கு ஓட்டு போட்டால் மு.க.ஸ்டாலின் அமைக்கும் ஆட்சி சமூகநீதி ஆட்சியாக, சமத்துவ ஆட்சியாக இருக்கும். மாநில சுயாட்சிக்காக கூட்டாட்சிக்காக இறுதிவரை அவர் போராடுவார் என்ற நம்பிக்கையோடு வாக்களித்த மக்களுக்குத்தான் வெற்றி.
பொதுவாக பாராட்டு விழா வுக்கு நான் ஒப்புக்கொள்வது இல்லை. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்பதால் ஒப்புக்கொண்டேன். இது முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், இந்திய மக்கள் அனைவருக்கும் உச்சநீதிமன்றம் மூலம் தமிழ்நாடு பெற்றுத்தந்துள்ள வெற்றி.
இங்கே நிறைய மாணவர்கள் இருக்கிறீர்கள். நீங்களே யோசித்துப் பாருங்கள் சி.எம். ஆகி மக்களுக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டினால் ஆப்டர்ஆல் ஒன்றிய அரசின் ஏஜென்டாக நியமிக்கப்பட்ட டெம்பரரியாக இங்கே தங்கியிருக்கின்ற ஒரு கவர்னர் அதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியும் என்றால், மக்கள் போடுகின்ற ஓட்டுக்கு என்ன மரியாதை? எலக்ஷன் எதற்கு நடத்தவேண்டும்?.
ஆளுநர் பதவி என்பது, எந்தப் பயனும் இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட். உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள் பர்திவாலா, மகாதேவன் அடங்கிய அமர்வு அரசியலமைப்பின் வழி நின்று தெளிவான தீர்ப்பை வழங்கி, பல ஆண்டுகளாக நிலவிய ஒரு பிரச்சினைக்கு முடிவு கட்டியிருக்கிறார்கள். பூனைக்கு மணி கட்டியிருக்கிறார்கள் ‘நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசுக்கும் மதிப்பளிக்கின்ற வகையில், ஆளுநர்கள் செயல்படவேண்டும்’ என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் இப்படி ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்திருக்கிறோம்.
பிரதமரின் உரிமையை குடியரசுத் தலைவர் எடுத்துக்கொண்டால் சும்மா இருப்பார்களா? இந்தத் தீர்ப்பு வந்ததும் தாங்கிக்கொள்ள முடியாமல், ‘குடியரசு துணைத் தலைவர் சொல்கிறார் நாடாளுமன்றம் பெரிய அதிகாரங்கள் கொண்டது என்று சொல்கிறார். ஏங்க நாங்களும் அதைத்தான் சொல்கிறோம் சட்டமன்றத்துக்கு, ஆளுநர்களை விட அதிக அதிகாரம் இருக்கிறது. தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சியை, இன்னும் உயர்த்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது.
இந்தியாவில் இருக்கின்ற டாப் 100 கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் லிஸ்ட் எடுத்து பாருங்கள். ஐந்தில் ஒரு பங்கு நம்முடைய தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. நாட்டிலேயே பிஎச்டி ஸ்காலர்ஸ் தமிழ்நாட்டில்தான் அதிகம். கல்வி நிலையங்களில், சயன்டிபிக் கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். பகுத்தறிவுக்கு எதிரான முட்டாள்தனமான கட்டுக்கதைகளை, மூடநம்பிக்கைகளை பரப்புகின்ற இடமாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஒருபோதும் இருக்கக் கூடாது.
இரண்டே அஜென்டா தான் இருக்கவேண்டும், ஒன்று சயன்டிபிக் அப்ரோச், மற்றொன்று சோசியல் ஜஸ்டிஸ். இதை கற்றுத் தருகின்ற இடமாகத் தான் கல்விக்கூடங்கள் இருக்கவேண்டும். இதற்கு மாறான நிகழ்ச்சிகளை நடத்துவதோ, இதற்கு எதிராகப் பேசுகிறவர்களை கெஸ்ட்டாக கூப்பிடுவதோ நடந்தால், இந்த அரசின் ரியாக்சன் கடுமையாக இருக்கும். ஏற்கெனவே ஒரு சம்பவத்தில் அது தெரிந்திருக்கும்.
நிறையப் பேர் இப்போது “படிக்காமாலேயே பெரிய ஆள் ஆகிவிடலாம், பணம் சம்பாதிக்க படிக்க வேண்டும் என்று அவசியமில்லை யூடியூப்-ல் கூட சம்பாதிக்கலாம் இன்ஸ்டாகிராமில் சம்பாதிக்கலாம் -அந்தக் கடை போடலாம், இந்தக் கடை போடலாம் என்று டிசைன் டிசைனா ஏமாற்றுவார்கள்.
அந்த வலையில் சிக்கிவிடாதீர்கள். அவர்கள் சொல்வதெல்லாம் விதிவிலக்குகள். விதிவிலக்குகள் எப்போதும் விதியாகாது. உங்களுக்கு விருப்பமான எந்த வேலையையும், தொழிலையும் செய்யலாம். அது தவறில்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் கல்விதான் அடிப்படை என்பதை மறந்துவிடாதீர்கள். படிப்பு பயனற்றது என்று யாராவது சொன்னால், அவர்களை சைலன்டாக உங்களுடைய வாழ்க்கையிலிருந்து அவாய்ட் செய்யுங்கள்.
இப்போது புதிது புதிதாக தேசிய கல்விக் கொள்கை, விஸ்வகர்மா திட்டம் என்று திட்டங்களை கொண்டு வருகிறார்கள். மற்றொரு பக்கம், சோசியல் மீடியா மூலமாக தவறான அறிவுரைகள், திசைதிருப்பல்கள், மறுபக்கம், மாணவர்களிடம் சாதிய உணர்வைத் தூண்டுவது என்று பல வகையில் சதி நடைபெறுகிறது. உங்கள் ரோல் மாடலை சோஷியல் மீடியாவில் தேடாதீர்கள். சோஷியல் மீடியா என்பது, பொழுதுபோக்குக்கான ஒரு இடம் அது உங்களுடைய திறனை மட்டுப்படுத்துவதாக இருக்கக் கூடாது இதை மீறி படித்து நீங்கள் முன்னேறவேண்டும்.
ஏற்கெனவே ஏஐ, குவாண்டம் கம்யூட்டிங் போன்ற துறைகளில் நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், கல்வியில் நம்முடைய தொலைநோக்குப் பார்வை, இதே வேகத்துடன், அடுத்த நூற்றாண்டுக்குத் தேவையான கல்வியை நம்முடைய மாணவர்களுக்குத் தர கல்வியாளர்கள் உறுதியேற்கவேண்டும். நமக்கான உரிமைகளை மீட்டு, உங்களைப் படிக்க வைப்பது அரசின் கடமை உங்களுக்கு நல்ல கல்வியை வழங்கி, அறிவார்ந்தவர்களாக உயர்த்துவது கல்வியாளர்களின் கடமை நாங்கள் உருவாக்கித் தருகின்ற வாய்ப்புகளையும், கல்வியையும் பயன்படுத்தி, வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி, உங்கள் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டியது, மாணவர்களாகிய உங்கள் கடமை.
இந்தக் கடமைகளை நிறைவேற்ற இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், திராவிட மாடல் அரசும் என்றைக்கும் துணை நிற்கும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


