
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அமமுக சார்பில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது….
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கொள்கையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. பேரூர் சிற்றூர் என கடைக்கோடி கிராமங்களில் கூட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே நான் தனி ஆள் அல்ல. எனக்குப் பின்னால் இலட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். எதிரணியை வீழ்த்துவதற்கு ஒருமித்த கொள்கை கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் அமமுக வேட்பாளராக களம் காண உள்ள மாவட்டச் செயலாளர் பார்த்திபனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
ஒன்றிய அளவில் பாஜக தமிழ்நாடு அளவில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக உள்ளது என்று சொல்லிவந்தார் டிடிவி.தினகரன். அப்படியிருக்கும் போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை என எதுவும் இல்லாமலேயே தன்னிச்சையாக சோளிங்கர் தொகுதியில் வேட்பாளரை டிடிவி.தினகரன் அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் இவ்வாறு தன்னிச்சையாக வேட்பாளர் அறிவிப்பை வெளியிடக் காரணம் என்ன?
வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம். தொடக்க நிலையிலேயே தினகரன் கட்சிக்கு பெரிய செல்வாக்கு எதுவும் இல்லை,அதனால் அவருக்கு மட்டும் ஒரு தொகுதியை ஒதுக்கலாம் என்று எடப்பாடி தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
இதனால் கோபமான டிடிவி.தினகரன், அதிரடியாக வேட்பாளரை அறிவித்துள்ளார்.இங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் பார்த்திபன், 2016 ஆம் ஆண்டு இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இதனால் இந்த அறிவிப்பு மிகவும் கவனிக்கத் தக்கதாக மாறியிருக்கிறது.இதன் உடனடி விளைவாக டிடிவி.தினகரனிடம் சமரசப் பேச்சுகள் தொடங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


