நாடாளுமன்றக் கூட்டுக் குழு பரிந்துரை செய்தபடி, ஒன்றிய வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டு, ஒன்றிய அமைச்சரவையும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு, வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு முழுமையாகத் திரும்பப் பெற வலியுறுத்தும் அரசினர் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
அவர் பேசியதாவது….
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் வாழும் நாடு இந்தியா. பல்வேறு இனம், மொழி, மதம், பண்பாடு, வழிபாட்டு நம்பிக்கைகள் இருந்தாலும், அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நாட்டை ஆளும் அரசும் இதே உணர்வை கொண்டதாகத்தான் செயல்பட வேண்டும்.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு, தனது அனைத்துச் செயல்பாடுகளையும் ஒருவித உள்நோக்கத்துடனே செய்து வருகிறது. எதைச் செய்தாலும், குறிப்பிட்ட தரப்பை வஞ்சிக்கும் வகையிலேயே திட்டங்களை தீட்டுகின்றனர். சிறுபான்மை முஸ்லிம் மக்களையும், இலங்கைத் தமிழர்களையும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் வஞ்சித்தது. இந்தியைத் திணித்து, இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது. பாஜக ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலம் வஞ்சிக்கிறது. சமூகநீதிக்கு எதிரான அவர்களது செயல்பாடுகள் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கிறது. நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கை அடித்தட்டு மக்களை பாதிப்பதாக அமைந்துள்ளன. இந்த வரிசையில் கொண்டு வரப்படும் வக்பு வாரிய சட்டத் திருத்தம், சிறுபான்மை முஸ்லிம் மக்களை வஞ்சிப்பதாக உள்ளது. இதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013 ஆம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024 ஆகஸ்ட் 8 ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்த சட்டத் திருத்தங்கள் வக்பு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாகவும், மத உரிமைகளை பாதிப்பதாகவும் இருந்ததால், திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் அதைக் கடுமையாக எதிர்த்தோம். இதையடுத்து, நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஆய்வுக்கு அதை அனுப்பினர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்களை கூட்டுக் குழு நிராகரித்துள்ளது. இந்தக் குழுவின் முடிவுகளுக்கு ஒன்றிய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கிவிட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய திருத்த சட்டம் எந்த நேரத்திலும் தாக்கல் செய்யப்படலாம். இந்தச் சட்டம் வக்பு அமைப்பையே காலப்போக்கில் செயல்பட விடாமல் முடக்கிவிடும். எனவே, முஸ்லிம் மக்களை வஞ்சிக்கும் இந்தச் சட்டத்துக்கு எதிரான நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசிய அவசரம். மத நல்லிணக்கம் மற்றும் அனைவருக்குமான அரசு என்ற இலக்கணத்தை அடிப்படையாக கொண்டு நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டியதும் அவசியமாகிறது.
தீர்மான விவரம்:
இந்திய திருநாட்டில் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்ற அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. அதை பேணிக் காக்கும் கடமை அரசுகளுக்கு உள்ளது. ஆனால் அதற்கு மாறாக, சிறுபான்மையின முஸ்லிம் மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995 ஆம் ஆண்டின் வக்பு வாரிய சட்டத்தைத் திருத்துவதற்கு கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் மக்களவையில் ஒன்றிய அரசு அறிமுகம் செய்த வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது’
இவ்வாறு அந்த தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தத் தீர்மானத்தை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன.பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.