பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பாஜக 195 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை நேற்று வெளியிட்டது.

பிப்ரவரி 29 ஆம் தேதி டெல்லி கட்சி தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் இரவு 11 மணிக்கு தொடங்கி விடிய விடிய 5 மணி நேரம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் கட்சி தலைமையகத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே,16 மாநிலங்களில் போட்டியிடும் 195 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். இதில்,

இவர்களில் பெண்கள் 28 பேர், 50 முதல் 57 வயதுக்கு உட்பட்ட வேட்பாளர்கள் 47 பேர்.

இந்தப்பட்டியலில், உத்தரப்பிரதேசம் 51,மத்தியபிரதேசம் 24,மேற்கு வங்கம் 20,குஜராத் 15,இராஜஸ்தான் 15,
கேரளா 12,சட்டீஸ்கர் 11,ஜார்க்கண்ட் 11,அசாம் 11,தெலங்கானா 9,டெல்லி 5,உத்தரகாண்ட் 3,காஷ்மீர் 2,
அருணாச்சல் 2,தாத்ரா நாகர் ஹவேலி 1,கோவா 1,திரிபுரா 1,அந்தமான் நிக்கோபர் 1 ஆகிய எண்ணிக்கையிலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.அமித்ஷா, ராஜ்நாத் சிங் உட்பட 34 ஒன்றிய அமைச்சர்கள், 2 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஸ்மிருதி இரானி மீண்டும் அமேதியில் போட்டியிடுகிறார். 2 முன்னாள் முதல்வர்களுக்கு சீட் தரப்பட்ட நிலையில், ஒன்றிய இணை அமைச்சர் 3 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கூட்டணி இழுபறி காரணமாக, முதல் வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறவில்லை.

2014 இல் குஜராத்தின் வதோதரா, உபியின் வாரணாசியில் போட்டியிட்டு இரு தொகுதியிலும் வென்ற மோடி, வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டார். 2 ஆவது முறையாக 2019 தேர்தலிலும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட அவர் தற்போது 3 ஆவது முறையாக வாரணாசியில் களமிறங்குகிறார். ஒன்றிய அமைச்சர்களான அமித்ஷா குஜராத்தின் காந்திநகர் தொகுதியிலும் ராஜ்நாத் சிங் உபி லக்னோ தொகுதியிலும், ஸ்மிருதி இரானி உபி அமேதி தொகுதியிலும் களமிறங்குகின்றனர். 2019 இல் ஸ்மிருதி இரானி அமேதியில் காங்கிரசு முன்னாள் தலைவர் இராகுலை எதிர்த்து போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது. இதனால் இம்முறையும் அவருக்கு அமேதி தொகுதி தரப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து மொத்தம் 34 ஒன்றிய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதில் சிலர் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் நிலையில், மக்களவையில் களமிறக்கப்பட உள்ளனர். மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றிய சுகாதார அமைச்சரான மன்சுக் மாண்டவியா இம்முறை குஜராத்தின் போர்பந்தர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதே போல,ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், திருவனந்தபுரம் தொகுதியில் களமிறக்கப்படுகிறார். இத்தொகுதி காங்கிரசு மூத்த தலைவர் சசிதரூரின் தொகுதியாகும். கேரளாவின் திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார்.

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவரான ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மத்தியபிரசேத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார். 2002 வரை இத்தொகுதி சிந்தியாவின் சொந்தத் தொகுதியாக இருந்து வந்தது. 2019 தேர்தலில் அவர் பாஜகவின் கிருஷ்ணா பால் சிங் யாதவ்விடம் தோல்வி அடைந்ததால், மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டு அமைச்சர் பதவி தரப்பட்டது. மற்றொரு மாநிலங்களவை உறுப்பினரான பூபேந்தர் யாதவ் இராஜஸ்தானின் அல்வார் தொகுதியிலும், ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அருணாச்சல் மேற்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

அண்மையில் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஆனாலும், ஏற்கனவே முதல்வராக இருந்த சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு முதல்வர் பதவி தரப்படவில்லை. இதனால் தற்போது அவருக்கு மபியின் விதிஷா மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல, திரிபுரா முன்னாள் முதல்வரான பிப்லாப் குமார் மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். அசாமின் முன்னாள் முதல்வரான சர்பானந்தா சோனாவாலுக்கு அம்மாநிலத்தின் திப்ரூகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

மொத்தம் 7 தொகுதிகள் கொண்ட தலைநகர் டெல்லியில் பிரவீன் கான்தேல்வால், மனோஜ் திவாரி மற்றும் பன்சூரி சுவராஜ் உள்ளிட்ட 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் பன்சூரி ஸ்வராஜ், மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் ஆவார். முதல் முறையாக இவர் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். கடந்த ஆண்டு மக்களவையில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் டேனிஷ் அலிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ரமேஷ் பிதுரிக்கு இம்முறை சீட் தரப்படவில்லை. அவருக்கு பதிலாக தெற்கு டெல்லி தொகுதியில் ராம்விர் சிங் பிதூரி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.

இதே போல, மத்திய இணை அமைச்சர்களான மீனாட்சி லேகி, ரமேஷ்வர் தெலி மற்றும் ஜான் பர்லாவுக்கு இம்முறை வாய்ப்பு தரப்படவில்லை. சர்ச்சைக்குரிய உறுப்பினரான பிரக்யா சிங் சாத்விக்கு பதிலாக மபியின் போபாலில் அலோக் சர்மா களமிறக்கப்பட்டுள்ளார். நடிகையும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினிக்கு மீண்டும் மதுரா தொகுதி தரப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் இவர் இத்தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றுள்ளார். மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா இராஜஸ்தானின் கோடா தொகுதியில் போட்டியிடுகிறார்.

தமிழ்நாட்டில் பாஜகவுடன் பெரிய கட்சிகள் கூட்டணி சேரத் தயாராக இல்லை. இதனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

Leave a Response