கமல் பேச்சால் வந்த சிக்கல்

இந்திய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதனால் அரசியல்கட்சிகள் அத்தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகின்றன.

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…..

சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காகச் சிறுபிள்ளையைத் தாக்குகின்றனர். அது அவரது தாத்தாவுக்குத் தாத்தா கூறிய தகவல். எங்களுக்கு அந்த வார்த்தையைச் சொன்னவர் பெரியார். சாமி இல்லை எனச் சொல்வது பெரியாரின் வேலை அல்ல, சமுதாயத்துக்காகக் கடைசி வரை வாழ்ந்தவர் பெரியார்.திமுக அல்லது வேறு எந்தக் கட்சியும் பெரியாரைச் சொந்தம் கொண்டாட முடியாது, பெரியாரைத் தமிழகமே சொந்தம் கொண்டாடும்.

நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றிய அரசு விரைவில் நடத்துவார்கள். கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தபோதும் நெஞ்சை நிமிர்த்தி நடந்தேன். என் முகத்தில் அப்போது சோகம் இல்லை. மீண்டும் நாம் சூழ்ச்சிக்கு ஆளாகக்கூடாது என்று நினைத்தேன். எனக்கு வெவ்வேறு இடங்களில் இருந்து அழைப்பு வருகிறது. இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்கு நான் மன்னிப்புதான் கேட்க வேண்டும். கலைஞர் என்னை திமுகவுக்கு வருமாறு அழைத்தார். அப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போகிறேன் எனச் சொல்லியிருக்க வேண்டும். அப்பா காங்கிரசில் இருப்பதால் காங்கிரசில் சேருகிறேன் எனச் சொல்லியிருக்க வேண்டும். அப்போதே அரசியலில் இறங்கி இருக்க வேண்டும்.

கோவையில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன, மொத்தமாக அனைத்து பூத்களிலும் பணியாற்ற 40 ஆயிரம் பேர் வேண்டும். கோவைக்கு வாங்க என கூப்பிடுவது மட்டும் போதாது, களப்பணியாற்ற 40 ஆயிரம் பேரைத் தயார் செய்ய வேண்டும். எனக்கு மூக்கு உடைந்தாலும் பரவாயில்லை, மருந்து போட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்பேன்.

நல்ல தலைமை தமிழகம் முழுவதற்கும் வர வேண்டும், அஜாக்கிரதையால் நாம் பலியாகி விடக் கூடாது. அனைவரும் சேர்ந்து தான் தேரை இழுக்க வேண்டும். கட்சிக்கு புதிதாக வருபவர்களுக்கு வேலியாக இருக்காமல் ஏணியாக இருக்க வேண்டும். கட்சியில் பதவி நிரந்தரம் இல்லை. உறவு தான் நிரந்தரம். பணியாற்றினால் பதவி நிரந்தரம்.

ஒருவரே பிரதமராக இருக்க வேண்டும் என நினைப்பது சர்வாதிகாரம். இந்தி ஒழிக எனச் சொல்லவில்லை. தமிழ் வாழ்க என்று சொல்கிறோம். இந்தி பேசினால் தான் வேலை என்றால், அந்த வேலை வேண்டாம். அன்பு ஒன்று தான் எனக்குத் தெரிந்த மதம், அதைவிட பெரிய மதம் மனிதம்

இவ்வாறு அவர் பேசினார்.

கமல்ஹாசனின் இந்தப் பேச்சு,அவர் திமுக கூட்டணி சார்பில் கோவை பாராளூமன்றத் தொகுதியில் போட்டியிடவிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதாக அரசியல்பார்வையாளர்கள் கூறுகின்றனர்.அதேசமயம் திமுக கூட்டணி முறையாக அறிவிக்கப்படுமுன்பே கோவையில் போட்டியிடுவேன் என்று பொருள் கொள்ளும்படி அவர் பேசியது அரசியல் ரீதியாகச் சிக்கல் என்றும் சொல்கிறார்கள்.

Leave a Response