சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த ஜூன் 16 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணையை இரத்து செய்யக் கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல, செந்தில் பாலாஜி எந்தத் தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி கொளத்தூரை சேர்ந்த எஸ்.இராமகிருஷ்ணன், அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்த்தன் ஆகியோர் ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக ஜூன் 29 ஆம் தேதி மாலையில் உத்தரவு பிறப்பித்த ஆளுநர், அடுத்த சில மணி நேரங்களில் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக எடுத்த முடிவை இரத்து செய்யக் கோரி எம்.எல்.ரவி மற்றொரு வழக்கையும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.