நீட் தேர்வின் அலங்கோலம் – அம்பலப்படுத்திய மாணவன்

சென்னை குரோம்பேட்டையில் ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் நீட் தேர்வில் 400 மதிப்பெண் பெற்றார். ஆனால் அவருக்கு மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த சோகம் தாங்காமல் அவருடைய தந்தையும் தற்கொலை செய்துகொண்டார்.

அந்த மாணவனின் நண்பரான எம்பிபிஎஸ் முதலாமாண்டு படித்து வரும் மாணவன் பயாஸ்தீன் அளித்த பேட்டி…..

நான் ஓப்பனாக சொல்கிறேன். நீட் தேர்வில் நான் ‘ஜஸ்ட் பாஸ்’ தான். அதாவது 160 மதிப்பெண் மட்டுமே எடுத்தேன். ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ரூ.25 இலட்சம் பணம் கட்டி மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட்டேன். இதில் முரண்பாடு என்னவென்றால், காசு இருப்பவன் டாக்டராகிவிட முடியும் என்றால், அடுத்தது அந்த டாக்டர் என்ன எதிர்பார்ப்பார்? டாக்டர் படிப்புக்கு செலவிட்ட காசை எடுப்பதில் தான் கவனமாக இருப்பானே தவிர, மக்களுக்குச் சேவை செய்வதில் இருக்க மாட்டான்.

இப்போது நீட் தான் உண்மையான தேர்வு, டாக்டரை உருவாக்கும் தேர்வு என்றால், இத்தனை நாட்கள் நீங்கள் பார்த்த டாக்டர்களை டுபாக்கூர் என்று நினைக்கிறீர்களா. என்னைவிட இரண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவன். அவனாலேயே டாக்டருக்கு சேர முடியவில்லை என்றால், பொருளாதார அடிப்படையில் தான் மருத்துவப் படிப்பு இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அவன் 400 மதிப்பெண் எடுத்துள்ளான். அவனால டாக்டருக்கு சேர முடியவில்லை. டாக்டர் ஆகவேண்டும் என்று அவன் நீட் பயிற்சி பெற்றான்.

மக்களுக்குப் பணி செய்ய வேண்டும் என்றுதான். 2 முறை முயற்சி செய்தார். மூன்றாவது ஆண்டு தான் எனது அப்பாவுக்காக நான் டாக்டர் ஆகவேண்டும் என்று சொன்னான். வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் இருந்து அழைப்பு வந்தது. அவனுக்கு ஒரே காரணம் அவன் அப்பாவுடன் இருந்து தமிழ்நாட்டில் படிக்கவேண்டும் என்பது தான். எனக்கு 15 நாட்களுக்கு முன்பு போன் செய்து மருத்துவப் படிப்பு எங்களுக்குக் கனவு டா. படித்து முடித்துவிட்டு மக்கள் பணியில் இரு டா என்று சொன்னான்’.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Response