காமாட்சியம்மன் கோயில் நிலத்தை அபகரித்த பாஜகவினர் – அதிர்ச்சித் தகவல்

புதுச்சேரி – அருள்மிகு காமாட்சியம்மன் கோயில் நிலத்தை அபகரித்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள்
ஜான்குமார் – ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் ஆகியோரையும், உடந்தையாக நின்ற அரசு அதிகாரிகளையும் கைது செய்யக்கோரி தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

புதுச்சேரி – பாரதி வீதியிலுள்ள பழம்பெருமை வாய்ந்த அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை போலி பத்திரங்கள் வழியே அபகரித்த வில்லியனூர் சார் பதிவாளர் உட்பட 13 பேர் இதுவரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அரசு அதிகாரிகளுக்கு ஆணையிட்ட மேல் அதிகாரிகளோ, இதற்குப் பின்னணியாகச் செயல்பட்ட அரசியல்வாதிகளோ இதுவரை கைது செய்யப்படவில்லை!

குறிப்பாக, மாவட்டப் பத்திரப் பதிவாளர் திரு.இரமேஷ், வட்டாட்சியர் திரு.பாலாஜி உள்ளிட்ட அரசு அதிகாரிகளைக் கைது செய்து விசாரிக்க வேண்டும். அதேபோல், கோயில் நிலத்தை தனது குடும்பத்தினரின் பெயரில் அபகரித்துக் கொண்டுள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் ஆகியோரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு, கோயில் நிலங்களுக்கான சந்தை மதிப்பை சுழியம் என அறிவித்து, கோயில் நிலங்களைப் பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கவும் உறுதியாகச் செயல்பட வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் செவ்வாய் (04.07.2023) அன்று காலை 10.30 மணியளவில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தெய்வத் தமிழ்ப் பேரவை புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் திரு. சிவ. மு. இராசாராம் அவர்கள் தலைமை தாங்குகிறார். தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ், திரு. அசோக்ராசு (புதுச்சேரி தெற்கு, செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்), திரு. முருகன் (தொரவி செயலாளர், த.தே.பே.), திரு. குமார் (ஐவேலி கிளைச் செயலாளர், த.தே.பே.) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளரும், தெய்வத் தமிழ்ப் பேரவை – செயற்குழு உறுப்பினருமான திரு. க. அருணபாரதி அவர்கள் தொடக்கவுரையாற்றுகிறார்.

நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி செயலாளர் திரு. முத்.அம். சிவக்குமார், திரு. பா. சண்முகம் (தலைவர், புதுவை மாநில விஸ்வகர்ம மகாஜன சங்கம்), திரு. கோ. அழகர் (புதுச்சேரி தலைவர், தமிழர் களம்), திரு. ச. மூர்த்தி (தலைவர், விஸ்வகர்ம முன்னேற்றக் கழகம்), திரு. இரா. முருகானந்தம் (தலைவர், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் கழகம்), திரு. ஆர். மோகனசுந்தரம் (தலைவர், அகில இந்திய மனித உரிமைகள் கழகம்), திரு. து. இரமேசு (புதுச்சேரி செயலாளர், நாம் தமிழர் – தொழிலாளர் நலச்சங்கம்), திரு. ஜெ. தனாளன் (பொதுச்செயலாளர், கைவினைஞர் வாழ்வுரிமைக் கட்சி) உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்கின்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் திரு. இரா. வேல்சாமி ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைக்கிறார். திரு. தே.சத்தியமூர்த்தி (தெய்வத் தமிழ்ப் பேரவை) நன்றி கூறுகிறார்.

இவ்வார்ப்பாட்டத்தில், தமிழர் ஆன்மிகச் செயல்பாட்டாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response