போர்க்கொடி தூக்கிய இருவர் – எடப்பாடி அதிர்ச்சி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையின்போது தமிழ்நாடு பாசக தலைவர் அண்ணாமலையை எடப்பாடி அதிமுகவினர் யாரும் கண்டுகொள்ளவில்லை.பரப்புரைக்கே வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டதாம். அதன்பின் பாசகவில் இருக்கும் நபர்களை அதிமுகவுக்கு இழுக்கும் படலத்தை எடப்பாடி தொடங்கினார். அதற்காக எடப்பாடி ஒரு குழுவை ஏற்படுத்தினார். அவர்கள் பாசக நிர்வாகிகளை இழுக்கத் தொடங்கினர்.

இது தொடர்பாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சிலர் பேசுவதாக இருந்தது. கே.பி.முனுசாமி, நந்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் பாசக தொடர்பாக கடுமையாக விமர்சித்து இருந்தனர்.

இந்நிலையில் டெல்லி மேலிடத்தில் இருந்து அதிமுக மூத்த தலைவர்கள் குறிப்பாக, மேற்கு மண்டலத்தை சேர்ந்த மூத்த தலைவர்களுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த மூத்த அமைச்சர்கள் 2 பேரும் அதிமுக ஆட்சியில் சக்திவாய்ந்த துறையை கையில் வைத்து இருந்தனர். நிறைய சம்பாதித்தனர். பல ஆயிரம் கோடி சம்பாதித்து பல துறைகளில் பினாமி பெயரில் முதலீடு செய்துள்ளனர். மேலும் வெளிநாடுகளிலும் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான எல்லாத் தகவல்களும் ஒன்றிய அமலாக்க துறையினர் எடுத்து வைத்துள்ளனர். அதை வைத்து பாசக மேலிடம் மிரட்டத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த மிரட்டல் காரணமாகத் தான் கடந்த 2 ஆண்டுகளாக இந்த 2 முன்னாள் அமைச்சர்களும் அமைதியாக இருந்து வருகிறார்கள். எந்த பெரிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. பெயர் அளவுக்கு மட்டும் தான் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தனர். பாசக தலைவர்கள் தொடர்பாக வாயைத் திறக்கவில்லை. எல்லாத் தலைவர்களும் பாசகவுக்கு எதிராகப் பேசிய போதிலும் இந்த 2 முன்னாள் அமைச்சர்களும் அமைதி காத்தனர். பேட்டி கொடுக்கவில்லை. பத்திரிகையாளர்களைக் கண்டால் ஓட ஆரம்பித்தனர்.

இப்போதும், டெல்லி பாசக தலைவர்கள் சிலர் தொலைபேசி மூலம் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த முன்னாள் அமைச்சர்கள் கடும் பயத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த மிரட்டலால் அந்த 2 பேரும் ஒன்று அதிமுகவில் இருந்து பாசக கூட்டணியைத் தொடர்வது, இல்லாவிட்டால் பேசாமல் வெளியே போய் விடலாம். பாசகவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடியிடம் இதுதொடர்பாகப் பேசிப் பார்க்கலாம் என்று பேசிப் பார்த்தனராம். தேவையில்லாமல் பாசகவிடம் மோத வேண்டாம். நம்மிடம் ஆட்சி அதிகாரம் கிடையாது. எல்லாரும் சிறைக்குப் போக வேண்டிய நிலைதான் ஏற்படும். ஒன்று பாசக தாக்குதலை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் நாங்கள் வெளியே போய் விடுவோம் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து எடப்பாடி நேற்று முன்தினம் பாசக தலைவர்களுக்கு எதிராக யாரும் பேச வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார். பாசகவினரை இழுக்கும் படலத்தையும் நிறுத்தி வைத்துள்ளார். உட்கட்சிக்குள்ளேயே கலகம் வரும் என்று எடப்பாடி எதிர்பார்க்கவில்லை.

இந்த 2 முன்னாள் அமைச்சர்கள் சேர்ந்தார்கள் என்றால் அதிமுகவை உடைத்து விடுவார்கள். இந்த உடைப்பு ஓபிஎஸ்சை விட வேகமாக இருக்கும் என்று எடப்பாடி கருதினார். இதனால்தான் எடப்பாடி பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கண்டபடி அண்ணாமலை விமர்சனம் செய்து வருகிறார். ஜெயலலிதாவை விட என் மனைவி ஆயிரம் மடங்கு பலம் வாய்ந்தவர். ஜெயலலிதாவுக்கு பர்கூரில் டெபாசிட் போச்சு என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். ஆனால் அதிமுக மூத்த தலைவர்கள் அமைதியாக இருப்பதால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Response