இப்படிச் செய்தால் கர்நாடகத்திலும் காங்கிரசு ஆட்சி – மல்லிகார்ஜுனகார்கே உறுதி

அகில இந்திய காங்கிரசுத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தலைவரான பின்பு கடந்த மாதம் (நவம்பர்) பெங்களூருவுக்குச் சென்ற போது கர்நாடக காங்கிரசுக் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பும், அரண்மனை மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டு இருந்தது.

அப்போது மல்லிகார்ஜுன கார்கே தனது சொந்த ஊரான கலபுரகிக்கு செல்லவில்லை. இந்த நிலையில், அகில இந்திய காங்கிரசுத் தலைவராக பதவி ஏற்ற பின்பு நேற்று முதல் முறையாக தனது சொந்த ஊரான கலபுரகிக்கு மல்லிகார்ஜுன கார்கே சென்றார். கலபுரகியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மல்லிகார்ஜுன கார்கேவை, கர்நாடக மாநில காங்கிரசு மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் திறந்த வாகனத்தில் மல்லிகார்ஜுன கார்கே அழைத்துச் செல்லப்பட்டார். வழி நெடுகிலும் காங்கிரசு தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தார்கள்.

பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு பேசியதாவது……..

கல்யாண கர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்காக 10 முக்கிய திட்டங்களை காங்கிரசுக் கட்சி கொண்டு வந்துள்ளது. அதன்படி, இந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, நீர்ப்பாசனத் திட்டங்கள், பெண்களுக்காகத் தனியாகக் கல்லூரி திறப்பு உள்பட 10 முக்கிய திட்டங்களைக் கொண்டு வந்து காங்கிரசு செயல்படுத்தும்.

கல்யாண கர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். அந்த ரூ.1,500 கோடி நிதியை மற்ற மாவட்டங்களுக்கும், பிற துறைகளின் வளர்ச்சிக்காகவும் பசவராஜ் பொம்மை ஒதுக்கினார். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்தப் பகுதியில் உள்ள மாவட்டங்கள் எப்படி வளர்ச்சி அடையும்?

இமாசல பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரசு அபார வெற்றி பெற்றுள்ளது. அதுபோல், கர்நாடகத்திலும் காங்கிரசு வெற்றி பெற வேண்டும். அகில இந்திய காங்கிரசுத் தலைவராக கர்நாடகத்தைச் சேர்ந்த நான் இருந்து வருகிறேன். எனக்குப் பெருமை சேர்த்துக் கொடுக்கும் விதமாக கர்நாடகத்தில் காங்கிரசுக் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பல பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக இருப்பார்கள். அவர்களைப் போன்று நம்முடைய தலைவர்களும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்து உழைத்தாலே கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சிக்கு வருவது உறுதி.

எனவே தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து சட்டசபைத் தேர்தலில் வெற்றிக்காக உழைக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இல்லாமல் சட்டசபைத் தேர்தலைச் சந்தித்தால், அது மக்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும். எனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் யாரும் இல்லை.

அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை காங்கிரசு மேலிடம் முடிவு செய்யும். அதுபோல், மந்திரிசபையில் யார்? இருக்க வேண்டும் என்பதையும் மேலிடம் தீர்மானிக்கும். காங்கிரசின் வெற்றிக்காக ஒவ்வொருவரும் கடினமாக உழைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Leave a Response