திமுக அரசின் இலட்சியம் இதுதான் – கோவையில் முதலமைச்சர் பேச்சு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கோவை வந்தார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை மாவட்டத்தில் நிறைவு பெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகியவை ஈச்சனாரியில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கோவை ரேஸ்கோர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து வாகனம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வழிநெடுகிலும் இருபுறங்களிலும் திரளான ஆண்கள், பெண்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தனியார் கல்லூரி மாணவிகள் பெருமளவில் திரண்டு வந்து முதலமைச்சரை வரவேற்றனர். அவர்களைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வாகனத்தில் இருந்து இறங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், சிறிது தூரம் நடந்து சென்றார்.

இதையடுத்து அங்கிருந்து வாகனம் மூலம் புறப்பட்டு விழா அரங்கிற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டு இருந்த அரசுத் துறைகளின் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார். பின்னர் விழா மேடைக்கு வந்தார்.

விழாவில் ரூ.663 கோடி செலவில் 748 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.272 கோடி மதிப்பில் 229 முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் 1 இலட்சத்து 7 ஆயிரத்து 410 பேருக்கு ரூ.588 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது…..

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து இந்த 15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு ஐந்தாவது முறையாக வந்திருக்கிறேன். இந்த மாவட்டத்தின் மீதும் இந்த மாவட்ட மக்கள் மீதும் நான் வைத்திருக்கக்கூடிய அன்பின் அடையாளம் இது.

இந்த விழாவை அரசு விழா என்று சொல்வதை விட கோவை மாநாடு என்று சொல்லும் வகையில் சிறப்பாக உள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், வருங்காலங்களில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை உங்களின் முகங்களில் பார்க்கக்கூடிய மகிழ்ச்சியின் மூலமாக அறிந்து கொள்கிறேன்.

தென்னிந்தியாவின் மிக முக்கியமான தொழில் நகரம் கோவை. பெருந்தொழில் மட்டுமல்ல சிறு, குறு, நடுத்தர தொழில் அதிகம் நிறைந்த நகரம். தமிழ்நாட்டுக்கே ஏற்றுமதி, இறக்குமதி குறியீடுகளை வளமாக வழங்கக்கூடிய மாவட்டமாக இந்த மாவட்டம் அமைந்துள்ளது. எனவே இங்கு இந்த விழா நடைபெறுவது மிகப்பொருத்தமானது.

கணக்குக் காட்டும் அரசு அல்ல, இந்த அரசு மக்களுக்கான அரசாக உள்ளது. பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறது. ஏதோ சிலருக்கு உதவிகளை செய்துவிட்டு கணக்குக் காட்டுபவர்கள் அல்ல நாங்கள். கணக்கிட முடியாத நலத்திட்ட உதவிகளைச் செய்யும் அரசு தான் தி.மு.க. அரசு என்று கம்பீரமாகச் சொல்வேன்.

கோவை பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு 1810 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்து, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி கடந்த ஓராண்டு காலமாக தமிழ்நாடு முன்னேறி வருகிறது.

அண்மையில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரைச் சந்திக்க டெல்லி சென்று இருந்தேன். அப்போது என்னைச் சந்தித்தவர்கள் தமிழ்நாட்டைப் பற்றியும், அதன் வளர்ச்சியைப் பற்றியும் கேட்டார்கள். அவர்கள் கேட்ட கேள்வியைப் பார்த்து ஒரு உயர்ந்த கருத்து பரவலாக இருப்பதை நான் உணர்ந்தேன்.
அது ஒரு நாளிலோ, அல்லது ஒரு மாதத்திலோ பெற்றதல்ல. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் அளித்துச்சென்ற அடித்தளத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்துத் தந்த பாதையில், தி.மு.க. ஆட்சி செல்வதால் பெற்றிருக்க கூடிய நற்பெயர் இது. மக்களிடம் கேளுங்கள் பல்வேறு மாநில அரசுகளும் தமிழ்நாட்டின் திட்டங்களை உன்னிப்பாகக் கவனித்து தங்களுடைய மாநிலத்தில் இதைப் பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால் இங்கே இருக்கக்கூடிய சிலரால் இதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தி.மு.க அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என சிலர் பொத்தாம் பொதுவாக சொல்லிக்கொண்டிருகிறார்கள். அவர்களிடம் நான் கேட்பதெல்லாம், எங்கள் ஆட்சியால் பயனடைந்த மக்களிடம் வந்து கேளுங்கள். ஏதோ பேட்டி கொடுப்பதற்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டு, வீட்டுக்குள் உட்கார்ந்து கொள்பவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாது. தமிழ்நாட்டு மக்கள் அடையும் நன்மைகளை நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது. மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து, மக்களைத் தேடி மருத்துவம், ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் இதுபோல எண்ணற்ற திட்டங்களை ஏற்றுக்கொள்ள, புரிந்து கொள்ள மனமில்லாமல் பேட்டி அளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நான் எப்போதும் முக்கியம் தருவதில்லை.

தன்மானம் இல்லாத, இனமானம் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டம்தான் இன்று தி.மு.க. ஆட்சியைப் பார்த்து விமர்சிக்கிறது. தி.மு.க. ஆட்சி என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒளிதரும் ஆட்சி. ஒரு தாய் தனது எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி வாழ்விப்பதைப் போல், தி.மு.க. அரசு அனைவருக்குமான அரசாகச் செயல்படுகிறது.

தேர்தலுக்கு முன் உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலம் மக்களிடம் இருந்து பெற்ற மனுக்களுக்குத் தீர்வு காண, ஆட்சிக்கு வந்ததும் அதற்காக தனித் துறையை உருவாக்கி, 100 நாட்களில் அவற்றில் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளேன். அந்த வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை 234 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தி இருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையும் கவனிக்கப்படும்.

அதன் அடிப்படையில்தான் அனைத்துத் தொகுதிகளிலும் மக்களுக்குத் தேவையான நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள, நீண்ட காலமாகச் செயல்படுத்த முடியாத 10 முக்கியமான கோரிக்கைகளை அரசுக்கு வழங்குமாறு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத முன்னோடித் திட்டம் இது. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல எங்கள் கூட்டணியில் இடம்பெறக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அல்ல. அ.தி.மு.க. சார்ந்தவராக இருந்தாலும், பா.ஜ.க.வில் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் சேர்த்துத் தான் அந்தத் தொகுதிகளும் பயனடைவதற்குதான் இந்தத் திட்டம். சிலர் காழ்ப்புணர்ச்சியோடு தூற்றுகிறார்கள். பரவாயில்லை. அவர்களும் பிழைக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன்.

நமது அரசின் திட்டங்களால் பயனடைந்து வரும் மக்களின் பாராட்டு எனக்குப்போதும். நமது கொள்கைகளும், கோட்பாடுகளும் நிறைவேறக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் என்னை விமர்சிக்கிறார்கள். தனிப்பட்ட விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் நான் விமர்சனங்களால் வளர்ந்தவன். எதிர்ப்பையும், அடக்குமுறைகளையும் மீறி வளர்ந்தவன் நான். என்னை யாராவது எதிர்த்தால்தான் உற்சாகமாகச் செயல்படுவேன். என்னை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் குந்தகம் விளைவிக்க நினைத்தால் நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். விமர்சனங்களை விரும்புபவன் நான், ஆனால் விதண்டாவாதங்களை அல்ல. வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்பவன் நான்.

சொந்தக் கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில் தங்களது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்கு, திசை திருப்புகிற நோக்கத்தோடு தி.மு.க. அரசை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசை விமர்சிப்பதற்கு தகுதி கிடையாது என்பதை நான் அழுத்தந்திருத்தமாகத் தெரிவிக்க விரும்புகிறேன். ஓராண்டு காலத்திலேயே ஓராயிரம் திட்டங்கள். ஓராண்டு காலத்திலேயே இவ்வளவு திட்டம் என்றால் 5 ஆண்டில் அளப்பரிய திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும், உலகில் அனைத்து வளம் கொண்ட மாநிலமாகவும் ஆக்குவதே எங்களுடைய இலட்சியம்.

இது உங்களுக்கான அரசு. உரிமையுடன் கோரிக்கை வையுங்கள் உண்மையாக நிறைவேற்றித் தருகிறோம். இந்த ஆட்சிக்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response