சிறந்த விவசாயியை ரவுடிப் பட்டியலில் சேர்ப்பதா? – தூத்துக்குடி காவல்துறைக்கு பெ.ம கண்டனம்

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்களில் ஒருவரான குரும்பூர் தமிழ்மணி பெயரை ரவுடிப் பட்டியலில் சேர்த்த
காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தமிழக உழவர் முன்னணியின் தமிழ்நாடு துணைத் தலைவருமான – தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் – குரும்பூர் தோழர் மு.தமிழ்மணி அவர்களை தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை போக்கிரி சரித்திரப் பதிவேட்டில் (Rowdy Sheet) சேர்த்து வைத்துக் கொண்டு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கையெழுத்துப் போடும்படி குரும்பூர் காவல்துறையினர் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

தோழர் தமிழ்மணி, தமிழ்த்தேசியப் பேரியக்க அமைப்புகளில் பொறுப்பில் இருப்பது மட்டுமின்றி, உழவர்களுக்கான கோரிக்கைகளுக்கு தொடர்ந்து போராடி வருபவர். சிறந்த விவசாயி. மாவட்ட ஆட்சியர் மாதந்தோறும் நடத்தும் உழவர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில், மிக முகாமையான நபராகத் தொடர்ந்து கலந்து கொண்டு உழவர் கோரிக்கைகளை அதிகாரிகளிடம் எடுத்துரைப்பவர். விவசாயிகள் மேம்பாட்டிற்கு அவர் உழைத்து வருவதைப் பாராட்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 2007ஆம் ஆண்டு, “குடியரசு நாள் விழா நற்சான்றிதழ்” வழங்கியுள்ளார். எங்களது தமிழக உழவர் முன்னணித் துணைத் தலைவராக செயல்படுவதன் மூலம், தமிழ்நாடு அளவில் அறிமுகமானவர்.

சமூக விரோதச் செயலிலும், தனிப்பட்ட குற்றச் செயலிலும் ஈடுபட்டதாக இவர் மீது எந்தக் காவல் நிலையத்திலும் வழக்கு இல்லை. இதுபோன்ற எந்தப் புகாரும் நிலுவையில் இல்லை. ஆனால், 2009ஆம் ஆண்டு – ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய திரு. E. முத்தையா அவர்களுக்கு தோழர் தமிழ்மணி மீது ஏதோவொரு வகையில் வெளியில் சொல்லப்படாத தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கிறது. அதனை மனதில் வைத்துக் கொண்டு, தமிழ்மணி பெயரை போக்கிரி சரித்திரப் பதிவேட்டில் (Rowdy Sheet) பதிவு செய்யும்படி குரும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு ஆணையிட்டிருக்கிறார்.

அதனை ஏற்று, அப்போதுள்ள உதவி ஆய்வாளர் தோழர் தமிழ்மணி பெயரை ரவுடிப் பட்டியலில் சேர்த்துள்ளார். இச்செய்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தோழர் தமிழ்மணி கேட்ட விளக்கத்திற்கு விடையாக மேற்படி காவல் நிலைய உதவி ஆய்வாளரே வழங்கி இருக்கிறார்.

ரவுடிப் பட்டியலில் சேர்ப்பதற்குரிய வழக்குகளாக குரும்பூர் காவல்துறை ஆய்வாளர் குறிப்பிட்டுள்ள வழக்குகள் மூன்று. இம்மூன்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பாக மக்கள் உரிமைகளுக்காக தமிழ்நாடு தழுவிய அளவில் நடத்திய வெகுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் சார்ந்தவை. இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோது 2007, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் குரும்பூர் காவல்துறையினர் போட்ட மூன்று வழக்குகளைச் சான்றாகக் காட்டி, தோழர் தமிழ்மணி பெயரை ரவுடிப் பட்டியலில் சேர்த்துள்ளார்கள், குரும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளரும், ஸ்ரீவைகுண்டம் காவல் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் E. முத்தையாவும்!

இம்மூன்று வழக்குகளும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, அவற்றில் தொடர்புடைய அத்தனை தோழர்களும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இவ்வழக்குகளில் “கொடுங்காயம் ஏற்படுத்தியதாகவும்” (இ.த.ச. 323), “பயங்கரமான ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும்” (இ.த.ச. 324), “ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும்” (இ.த.ச. 194b) பொய்யாக இட்டுக்கட்டி முதல் தகவல் அறிக்கையில் சேர்த்திருந்தனர். இக்குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்து தோழர் தமிழ்மணியையும், அவர்களோடு சேர்ந்து அவ்வார்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட மற்ற தோழர்களையும் விடுதலை செய்தது.

இன்றைய நாளில் அவர் மீதும், அவரைச் சேர்ந்த தோழர்கள் மீதும் குரும்பூர் காவல் நிலையத்தில் ஒரேயொரு வழக்குதான் நிலுவையில் உள்ளது. அது, 2015ஆம் ஆண்டு – செம்மரம் கடத்துவார்கள் என சந்தேகத்தின் பெயரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 அப்பாவித் தமிழர்களைப் பிடித்து ஆந்திரக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றபோது, தமிழ்நாடெங்கும் நடந்த கண்டனப் போராட்டங்களின் ஒரு பகுதியாக குரும்பூரிலும் எங்கள் இயக்கத் தோழர்கள் நடத்திய ஒரு போராட்டத்தில் சந்திரபாபு நாயுடு கொடும்பாவி எரித்ததாக உள்ள வழக்கு மட்டுமே.

1.எல்லா இடங்களிலும் நடப்பதுபோல் சனநாயகப் போராட்டங்களில் கலந்து கொண்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தமிழக உழவர் முன்னணியின் தமிழ்நாடு துணைத் தலைவருமான தோழர் மு. தமிழ்மணி பெயரை போக்கிரி சரித்திரப் பதிவேட்டிலிருந்து (Rowdy Sheet) நீக்க தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2.தனிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடாத தோழர் மு. தமிழ்மணி பெயரை, சொந்தக் காழ்ப்புணர்ச்சி காரணமாக சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ரவுடிப் பட்டியிலில் சேர்க்க ஆணையிட்ட அன்றைய – ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட – காவல்துறை கண்காணிப்பாளர் E. முத்தையா அவர்கள் மீதும், அவருடைய சட்டவிரோத ஆணையைச் செயல்படுத்திய, அப்போதைய குரும்பூர் உதவி ஆய்வாளர் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் இதில் தலையிட்டு, உண்மை நடப்புகளை விசாரித்து அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response