முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 500 அபராதம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கடந்த சில நாட்களாக பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் முகக்கவசம் அணிவது இல்லை. இந்நிலையில், இன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் இராதாகிருட்டிணன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இராதாகிருட்டிணன்,

சென்னை ஐஐடியில் 700 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஐஐடியில் உள்ள 19 விடுதிகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த 30 பேரும் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இலேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. அனைவரும் நலமுடன் இருக்கின்றனர்.

மீண்டும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிரித்து வருவதால் முகக்கவசம் அணிவது அவசியமாகும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் காலம் தாழ்த்தாமல் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பேருந்துகளில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

பொதுமக்கள் வேலை செய்யும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை மண்டல அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Response