“தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுதல்” “தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல்” உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் நாளையும் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இதற்கு திமுக ஆதரவு கொடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று தொடங்கிய வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர்கள் முழுமையாகக் கலந்துகொண்டனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் இன்று நகரப்பேருந்துகள் முழுமையாக ஓடவில்லை. பெயருக்கு ஒன்றிரண்டு பேருந்துகள் ஓடின.
இதனால், பொதுமக்கள், மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து இறங்கியவர்கள், போராட்ட விவரம் தெரியாமல் வெளீயில் வந்தவர்கள் ஆகிய அனைவரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தொமுச பொருளாளர் நடராஜன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
போராட்டம் நாளை தொடர்ந்தாலும் 60% அரசு பேருந்துகள் இயக்கப்படும். முன்னணி நிர்வாகிகள் நாளைய போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். பொதுமக்களின் நலன் கருதி நாளை வழக்கம் போல் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சாதாரண ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்குச் செல்வார்கள். போராட்டம் நாளை தொடர்ந்தாலும் தமிழகத்தில் நாளை 60% அரசு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இத்தகவலால் சென்னை மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
தொழிலாளர்கள் போராட்டம் நியாயமானதுதான் ஆனாலும் அதனால் நாங்கள் கஷ்டப்படுகிறோம் என பொதுமக்கள் கூறிய கருத்துக்கு மதிப்பளித்து தொழிற்சங்கத்தினர் இறங்கிவந்துள்ளனர்.
ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய அரசு செவிட்டு அரசாகவே இருக்கிறது.