ஒரே நாடு ஒரே சட்டம் – சிங்கள அரசின் முனைப்புக்குக் கடும் எதிர்ப்பு

ராஜபக்சே குடும்பத்தின் தலைமையில் இயங்கும் சிங்கள அரசாங்கம், பல தேசிய இனங்கள் வாழும் இலங்கையில் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த முனைகிறது.சிங்கள ஆதிக்கத்தின் கீழ் தமிழ் மற்றும் இஸ்லாமியர்கள் இருக்கவேண்டும் என்பதற்காக இதைச் செய்யத் துடிக்கிறார்கள்.

இச்சட்டம் கொண்டு வருவதற்காக சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை கொடுக்கும்படி கோத்தபய ராஜபக்ச முஸ்லீம்கள் உள்ளிட்ட 13 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமித்துள்ளார். அதில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் வெறுப்பின் வெளிப்பாட்டை ராஜபக்சே சந்திப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது….

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 13 உறுப்பினர்களைக் கொண்ட செயலணியை நியமித்துள்ளார்.

சிறைத்தண்டனை அனுபவித்த – தமிழ்பேசும் மக்களுக்கு எதிராக இனவாதக் கருத்துகளை வெளியிட்டு வரும் ஞானசார தேரரை ஜனாதிபதி செயலணியின் தலைவராக எந்தவகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?

13 உறுப்பினர்களைக் கொண்ட இந்த விசேட ஜனாதிபதி செயலணியில் தமிழ்ப் பிரதிநிதி ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை. இது ஜனாதிபதியின் திட்டமிட்ட செயலா?

ஆனபடியால் ஜனாதிபதி இவ்விதமான கருமங்களைச் செய்கின்றபோது அவற்றை நாட்டு மக்கள் – விசேடமாக தமிழ்பேசும் மக்கள் – தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கக்கூடாது. அதை அவர்கள் வெறுப்பார்கள். அதுதான் நிலைமை”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response