ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் – ஆட்சியர் அறிவிப்பு

தமிழகத்தில் சமீப காலங்களில் ஒரு சில மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் வாழ்வாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தி கொரோனா மூன்றாம் அலை தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் 09.08.2021 முதல் விதிக்கப்படுகிறது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தியாவசியக் கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறிகடைகள், அடுமனைகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

 மாவட்டத்திலுள்ள உணவகங்கள் அனைத்திலும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது. மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

 ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தேநீர்க் கடைகளும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

 திருமணம் நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மிகாமலும், ஈமச்சடங்குகளில் 20 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.

 மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் இயங்கும் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனிக் கடைகளாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

 ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் வருகைக்குத் தடை விதிக்கப்படுகிறது.

 கர்நாடகா – தமிழ்நாடு மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச் சாவடி வழியாக ஈரோடு மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் கடைசி 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR பரிசோதனை சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணைகள் செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக காண்பிக்க வேண்டும், இல்லையெனில் சோதனைச்சாவடியிலேயே கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

 ஈரோடு மாவட்டத்தில் வாரச்சந்தைகள், தினசரி சந்தைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றிட நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகைகடை, காய்கறிக்கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.

இதன்படி, ஈரோடு ஈஸ்வரன்கோயில் வீதி, திருவேங்கடசாமி தெரு, காந்திஜி சாலை,பிருந்தா வீதி, பழைய செண்ட்ரல் திரயரங்க சாலை, மணிக்கூண்டு, ஆர்.கே.வி சாலை, மேட்டூர் சாலை, ஸ்டோனி பாலம், வ.உ.சி பூங்கா, காவேரி சாலை ஆகிய இடங்கள் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அனைவரும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றி நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதில் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணன் உண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Response