இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் இலிட்டர் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல் இலிட்டர் 96.94 ரூபாய்க்கும், டீசல் இலிட்டர் 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால், மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இதையொட்டி, காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல் பங்குகளில் நீங்கள் பணம் செலுத்தும்போது, மோடி அரசின் பணவீக்க உயர்வை உணர்வீர்கள். வரி வசூல் தொற்று அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன’ என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் வரும் 11 ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று காங்கிரசுக் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரசுக் கட்சி சார்பில் வரும் 11 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் (பங்க்குகள்) முன்பு போராட்டம் நடைபெற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெகுமக்களைப் பாதிக்கும் சிக்கலுக்காக காங்கிரசுக்கட்சி போராட்டம் அறிவித்துள்ளதைப் பலரும் வரவேற்கின்றனர்.