2 ஆம் முறையாக பயணம் இரத்து – மோடி பயப்படுகிறாரா?

அசாம் மாநிலம், கவுகாத்தியில் இன்று கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு-2020 தொடங்குகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த அசாம் பாஜக செய்தித் தொடர்பாளர் ரூபாயம் கோஸ்வாமி, மோடியின் கவுகாத்தி வருகை இன்னும் உறுதியாகவில்லை என்று கூறினார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டங்கள் வெடித்த நிலையில், பிரதமர் மோடியின் அசாம் வருகை தள்ளி வைக்கப்படுவது இது 2 ஆவது முறையாகும். ஏற்கனவே இங்கு நடக்க இருந்த இந்தோ-ஜப்பான் ஆண்டு மாநாடு, போராட்டம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசியமக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களின் எண்ணிக்கையும், தீவிரமும் அதிகரித்துள்ளது. எனவேதான், பிரதமர் மோடி 2 ஆவது முறையாகத் தனது அசாம் பயணத்தை இரத்து செய்துள்ளார். கடந்த முறையும் பிரதமர் மோடி தனது கட்சி ஆளும் மாநிலத்தை பார்வையிடக் கூட வரவில்லை. ஏனென்றால், பொதுமக்களின் கோபம்?’ எனக் கூறியுள்ளார்.

Leave a Response