கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேர் சமீபத்தில் பதவி விலகல் கடிதம் கொடுத்தனர்.
ஆனால் அவர்களுடைய விலகல் கடிதங்களை பேரவைத்தலைவர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. மேலும் மந்திரிகளாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் இருவர் தங்கள் மந்திரி பதவியிலிருந்து விலகி எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில்,பதவி விலகிய 15 உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என்றும், அதேசமயம் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதையடுத்து,பேரவைத்தலைவர் அறிவித்தபடி, கர்நாடக சட்டசபை நேற்று(ஜூலை 18) முற்பகல் 11:15 மணிக்கு கூடியது. காங்கிரஸ், ம.ஜ.த.,வினரின் கூச்சல், குழப்பத்தால், நம்பிக்கை கோரும் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை. நேற்று ஒரே நாளில், மூன்று முறை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது. சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட போதிலும் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேற மறுத்துவிட்டனர். சட்டசபையில் தூங்கினர்.
“நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த கோரி பாரதீய ஜனதா உறுப்பினர்கள் சட்டசபை கூட்ட அரங்கத்திற்குள்ளேயே இரவு முழுவதும் இருப்பார்கள்” என்று எடியூரப்பா அறிவித்தார். அதன்படி அக்கட்சி உறுப்பினர்கள் கூட்ட அரங்கத்திலேயே படுத்து தூங்கினர்.
இன்று நண்பகல் 1:30 மணிக்குள், சட்டசபையில் கூட்டணி அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வர் குமாரசாமிக்கு, ஆளுநர் கடிதம் அனுப்பி நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார். இதனால், குமாரசாமி அரசு தப்பிக்குமா? என்பது இன்று பிற்பகலுக்குள் தெரிந்து விடும்.
மத்திய ஆட்சி அதிகாரத்தைப் பல வழிகளிலும் துஷ்பிரயோகம் செய்து வருகிறது பாஜக என்று பலரும் விமர்சனம் செய்துவருகின்றனர்.