பச்சை தமிழகம் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரனின் வலி நிறைந்த குறிப்பு, நேற்று (யூன் 17) மாலை தந்தி டிவி மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று திரு. ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்கு வரக்கூடாது என்று வாதிட்டேன். ரஜினி ரசிகர்கள் சிலரும், ஆர்யத்துவக் கூட்டத்தினர் பலரும் அடிப்பதற்கு மேடையை நோக்கிப் பாய்ந்தனர். மிக மோசமான வார்த்தைகளால் அர்ச்சித்தனர். கூச்சலிட்டு பேச விடாமல் தடுத்தனர். இவர்கள் அரசியலுக்கு வந்தால், தமிழகம் என்னவாகும் என்பதை நடுனிலையாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். திரு. பாண்டே வருத்தம் தெரிவித்தார். திரு. நாஞ்சில் சம்பத் பேசும்போதும் மிக அநாகரிகமாக நடந்துகொண்டது இந்த பா.ஜ.க. B-டீம். முட்டாள்தனமாக ஒருவனை வணங்கும் ரசிகர் கூட்டமும், மூர்க்கத்தனமாக வெறியோடு இயங்கும் ஒரு பாசிசக் கூட்டமும் தமிழகத்தில் கைகோர்த்திருக்கின்றன. ரஜினி ரசிகர்கள் பா.ஜ.க.வின் பீ டீம் மட்டுமல்ல, அவர்களின் அடியாட்கள் என்பது அரங்குக்கு வந்த காவித்துண்டுகளையும், “பாரத் மாதா கி சை” முழக்கங்களையும் கேட்கும்போது புரிந்தது. “நாங்கள் தனிக் கட்சி துவங்கப் போகிறோம்” என்று கத்தினர். உங்களுக்கு பணம் தருவது பா.ஜ.க. என்றேன். பேச்சு மூச்சில்லை. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு அடித்து, அதிகார வரம் பெற்று அசத்தலாம் என்று கனவு காண்கிறது இந்தக் கூட்டம். சாராயக் கடைகளுக்கும், மணல் குவாரிகளுக்கும் எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பெண்கள் இதையும் எதிர்த்தாக வேண்டும். ரஜினியின் ஆண்டவன் ஒரு வழியாகப் பேசி, இவர் அரசியலுக்கு வந்தால், தமிழ்நாடு பெரும் அவலத்தை சந்திக்கும் என்பது உறுதி.