தில்லியில் இருந்து கொண்டே தமிழ்நாட்டு வாக்காளர் நீக்கம் – இராகுல்காந்தி வெளிப்படை

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி கடந்த மாதம் தில்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, மக்களவைத் தேர்தல், மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வாக்குகளை திருடியதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டினர்.

குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் 1 இலட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதை ஆதாரத்துடன் அவர் வெளியிட்டார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பின்னர், பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து பேரணி நடத்திய இராகுல் காந்தி, காங்கிரசுக் கட்சி விரைவில் வாக்குத் திருட்டு குறித்த புதிய ஹைட்ரஜன் குண்டை வீசும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தில்லியில் நேற்று காலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது இராகுல்காந்தி கூறியதாவது….

வாக்குத் திருட்டில் ஈடுபடுவோரையும், இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களையும் தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார். கர்நாடக சட்டப்பேரவைத் தொகுதியின் தரவுகளில் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரசு ஆதரவாளர்களின் வாக்குகள் முறையாக நீக்கப்படுகின்றது. தேர்தல் ஆணையம் இதனை நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணையம், வாக்கு மோசடி செய்பவர்களை பாதுகாப்பதை நிறுத்திவிட்டு வாக்காளர் நீக்கம் தொடர்பான விசாரணையில் கர்நாடக சிஐடியால் கேட்கப்பட்ட தகவல்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அது அரசியலமைப்புச் சட்டத்தின் படுகொலைக்கு உடந்தையாக இருப்பது உறுதியாகத் தெரியும்.

இப்போது கூறப்பட்டுள்ளவை ஹைட்ரஜன் குண்டுகள் இல்லை. அவை விரைவில் வரும். நான் அடித்தளத்தை உருவாக்கி வருகிறேன். இது 10-15 ஆண்டுகளாக நடந்து வருகின்றது. இந்தியாவின் ஜனநாயகம் கடத்தப்பட்டுள்ளது. இந்திய மக்களால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பற்ற முடியும். இராகுல்காந்தியால் உண்மையைக் காட்டுவதற்கு முடியும். மக்கள் தங்கள் ஜனநாயகமும், அரசியலமைப்பும் திருடப்பட்டதை உணரும் நாளில் வேலை முடிந்துவிடும்.

கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் இருந்து 6,018 வாக்காளர்களின் பெயரை நீக்க முயற்சிக்கப்பட்டது. தானியங்கி மென்பொருளை பயன்படுத்தி மகாராஷ்டிராவின் ராஜூரா தொகுதியில் மோசடியான முறையில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

ஒரே அமைப்பு இதனை செய்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, அரியானா, உத்தரப்பிரதேசத்திலும் இதுபோன்று நடக்கிறது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. எங்கள் கோரிக்கை என்னவென்றால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன் வேலையைச் செய்ய வேண்டும். கர்நாடக சிஐடிக்கு நீங்கள் சாட்சியமளிக்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தை அழித்தவர்களை தலைமை தேர்தல் ஆணையம் பாதுகாக்கிறது. யாரோ ஒருவர் இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதற்கு திட்டமிட்டு குறிவைத்து வருகிறார்.

நான் எதிர்க்கட்சித் தலைவர். 100 சதவீத ஆதாரங்கள் இல்லாத எதையும் நான் கூறமாட்டேன். நான் என் நாட்டை நேசிக்கும் ஒருவர். நான் என் அரசியலமைப்பை நேசிக்கிறேன். நான் ஜனநாயக செயல்முறையை விரும்புகிறேன். அந்த செயல்முறையை நான் பாதுகாக்கிறேன். கர்நாடக மாநிலம் அலந்த் தொகுதியில் 6018 வாக்குகளை ஒருவர் நீக்குவதற்கு முயன்றார். ஆனால் தற்செயலாக சிக்கிக்கொண்டார். வாக்குச்சாவடி நிலை அதிகாரி ஒருவர் தனது சொந்த மாமாவின் வாக்கு கூட வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தபோதுதான் இந்த மோசடி தற்செயலாக அம்பலமானது.

வாக்கு நீக்கம் குறித்து விசாரணை நடந்து வருகின்றது. 18 மாதங்களில் கர்நாடக சிஐடி அதிகாரிகள் தேர்தல் ஆணையத்துக்கு 18 கடிதங்களை எழுதி இருக்கிறார்கள். இதில், இணைய ஐபி முகவரி மற்றும் செல்போன் எண், ஒடிபி தடயங்கள் போன்றவற்றை கர்நாடக சிஐடி போலீஸ் கேட்டுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகளை எங்கு நடத்தப்படுகின்றது என்பதை இவை காண்பிக்கக்கூடும் என்பதால் தேர்தல் ஆணையம் இதனை வழங்கவில்லை. வாக்கு திருடர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாக்கிறார். இதனை யார் செய்கிறார்கள் என்பது தேர்தல் ஆணையத்துக்கு தெரியும்.

வாக்குத்திருட்டு பற்றிய ஆராய்ச்சிக்கு இரண்டு- மூன்று மாதங்கள் ஆகும். இந்த ஆய்வை நாங்கள் முடித்ததும் ஒவ்வொரு மாநில தேர்தல்கள் மற்றும் மக்களவைத் தேர்தல் எவ்வாறு வாக்குகள் திருடப்படுகின்றன என்பதில் உங்கள் மனதில் எந்த சந்தேகமும் இருக்காது. உண்மையை வெளிப்படுத்துவதும், அதை நாட்டு மக்களுக்கு காண்பிப்பதும் எனது வேலையாகும். தேர்தல் ஆணையத்திற்குள் இருந்து தான் காங்கிரசுக் கட்சி தகவல்களையும், உதவியையும் பெறுகிறது.

இளைஞர்கள் வாக்குத்திருட்டு செய்யப்படுகின்றது என்பதை அறியும்போது அவர்களின் பலமும் அதில் சேரும். இதற்கு மூலக்காரணம் யார் என்பதை மக்கள் முன் வைப்பேன். எனது ஹைட்ரஜன் குண்டு அனைத்தையும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வெளிப்படுத்தும்.

டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் அழிக்கப்படுகிறது. அதேபோல் பல மாநிலங்களை சேர்ந்த நபர்கள் வேண்டுமென்றே கர்நாடக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள்.

இவ்வாறு இராகுல்காந்தி கூறினார்.

இராகுல் காந்தியின் வெளிப்படையான இந்தக் குற்றச்ச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response