பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் 2 பேராசிரியர்களுக்குச் சிக்கல் – விவரம்

ஏப்ரல் 25,2025 அன்று ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.இரவியால் நடத்தப்பட்ட சட்டத்துக்குப் புறம்பான துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் எவரும் பங்கேற்கவில்லை.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை, துணைவேந்தர் ஜெகநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று அவரிடம், 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் காரணமாக அவர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. அதேசமயம், தனது பிரதிநிதிகளாக 2 பேராசிரியர்களை மாநாட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார்.

இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கப் பொதுச்செயலாளர் சக்திவேல் கூறுகையில்…

பல்கலைக்கழக மேலாண்மைத் துறைப் பேராசிரியர் யோகானந்தன் மற்றும் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையின் இயக்குநர் பிரகாஷ் ஆகியோரை பிரதிநிதிகளாக துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஊட்டி மாநாட்டைப் புறக்கணித்துள்ள வேறு எந்த பல்கலைக்கழக துணைவேந்தர்களும், இதுபோன்று தங்களது பிரதிநிதிகளை அனுப்பி வைக்கவில்லை.

மாநாட்டிற்கு சென்றுள்ள பேராசிரியர்கள் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. ஆணவப் போக்கோடு ஆளுநர் ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு, தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு நேர்மாறாக தனது ஆட்களை துணைவேந்தர் ஜெகநாதன் அனுப்பி வைத்துள்ளார். பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது.

அத்துடன், தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை, உரிய விசாரணை நடத்தி, யோகானந்தன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பெரியார் பல்கலைக் கழகத் தொழிலாள்ர்கள் சங்கத்தின் இந்த எதிர்ப்பு காரணமாக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பேராசிரியர்கள் யோகானந்தன் மற்றும் பிரகாஷ் ஆகியோருக்குக் கடும் சிக்கல் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response