ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் தலைமையில் நடந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை 35 துணைவேந்தர்கள் புறக்கணித்தனர். அரசு பல்கலைக்கழக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர்.
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 14 துணைவேந்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட்டதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதேபோல், கல்வித்துறையில் பல குழப்பங்களை ஆளுநர் விளைவித்து வந்தார். இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்கலை வேந்தராக மாநில முதல்வர் இருப்பார் என்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதால் உச்சநீதிமன்றமே தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இந்தத் தீர்ப்பின் மூலம் மாநில முதல்வரே பல்கலைக்கழக வேந்தராக இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து, முதல்வரே வேந்தராக இருப்பார் என்று அரசிதழில் வெளியிடப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து துணைவேந்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின், உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் ஏப்ரல் 25, 26 ஆகிய இரு நாட்கள் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடக்கும் என்றும், சிறப்பு அழைப்பாளராக குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் கலந்து கொள்வார் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் துணை வேந்தர்கள் மாநாட்டுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு விளக்கமளித்த ஆளுநர் மாளிகை, துணைவேந்தர்கள் மாநாடு முன் கூட்டியே திட்டமிட்டது. மாநில அரசுடன் மோதல் போக்கு எதுவும் இல்லை என்று கூறியிருந்தது.
இந்நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். அங்கிருந்து மகிழுந்து மூலம் ஊட்டிக்கு சென்றார்.
குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தார். அங்கிருந்து இராணுவ ஹெலிகாப்டர் மூலம் நேற்று ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்குச் சென்றார்.
அங்கு அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி, தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நீலகிரி பாமஉ ஆ.இராசா, மாவட்ட ஆட்சியர் இலட்சுமி பவ்யா தண்ணீரு, காவல்துறை கோவை சரக டிஐஜி சசிமோகன் ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து மாநாடு நேற்று பிற்பகல் 12 மணியளவில் துவங்கியது. மாநாட்டை குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு அரசு, தனியார் மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துணைவேந்தர்கள் 49 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், தனியார் மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 14 துணைவேந்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 35 துணைவேந்தர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். சில பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள் கலந்துகொண்டனர். அதன்படி மொத்தம் 33 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த எந்த துணைவேந்தர்களும் கலந்து கொள்ளவில்லை. இரு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் மட்டும் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள் இந்த மாநாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்ததால் ஆளுநர் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார். துணை வேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்ததால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கரும் அதிருப்தியடைந்தார்.
இதனால் மாநாடு துவங்கியது முதல் ஆளுநர் ஆர்.என்.இரவி இறுக்கத்துடன் காணப்பட்டார். கோபம், கொப்பளிக்கும் வார்த்தைகளை அவர் வெளிப்படுத்தினார்.
இதனைக் கண்ட குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் பேசும்போது ஆளுநரைப் பார்த்து, சில துணைவேந்தர்கள் வராமல் இருக்க பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதற்காக, நீங்கள் வருத்தப்படவேண்டாம் என ஆறுதல் கூறிப் பேசினார்.
இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி தமிழ்நாடு அரசுக்கு சிம்மசொப்பனமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள நினைத்த ஆளுநர் ஆர்.என்.இரவியின் எண்ணம் தவிடுபொடியானது.
ஆளுநர் அசிங்கப்பட்டது போதாமல் குடியரசுத் துணைத்தலைவரையும் அழைத்து அசிங்கப்படுத்தியதால் அவர் கடும் அதிருப்தியடைந்தார்.
ஆளுநரின் அத்துமீறல் படுதோல்வியைச் சந்தித்ததால் தன் இயலாமையை மறைக்க மாநாட்டில் தமிழ்நாடு அரசு மீதும், கல்வி நிலை குறித்தும் சேற்றை வாரி இறைத்தார். இந்தியாவிலேயே கல்வித்துறையில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது என்று ஒன்றிய அரசே ஒப்புதல் அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஆளுநர் இவ்வாறு பேசியது அவருடைய ஆத்திரத்தின் வெளிப்பாடே என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.