மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரசு ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
அங்கு, ஒன்றிய அரசு கொண்டு வந்த தேசியக் கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதலே 3 ஆவது மொழிப்பாடமாக இந்தி கட்டாயம் கற்பிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. முன்பு, மும்மொழிக் கொள்கை இடைநிலைக் கல்வி முதல் அமல்படுத்தப்பட்டு வந்தது. இப்போது மராத்தி, ஆங்கில வழிப் பள்ளிகள் அனைத்திலும் 1 ஆம் வகுப்பு முதலே இந்தி கற்பிக்க வேண்டும். மராத்தி, ஆங்கிலத்தைத் தவிர்த்து இது மாணவர்களுக்கு 3 ஆவது மொழியாக இருக்கும்.
தேசியக் கல்விக் கொள்கை 5+3+3+4 என்ற புதிய கல்வி அமைப்பை முன்மொழிகிறது. முதல் 5 வருடம் அடித்தளக் கல்வி, 3 வருடம் ஆயத்தப் படிப்பு, அடுத்த 3 வருடம் நடுநிலைக் கல்வி மற்றும் 4 வருடங்கள் இடைநிலைக் கல்வி என 4 கட்டங்களாக கல்வியைக் கற்பிக்க முன்மொழிகிறது. அதனடிப்படையில், ஆரம்பக் கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வரும் விதமாக மகாராஷ்டிர அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிர மாநில அரசின் இந்த முடிவுக்குக் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மேலும், மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவருடைய சமூகவலைதளத்தில், இந்தியை 5 ஆம் வகுப்பு வரை கட்டாயமொழிப் பாடமாக்குவதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அனைத்திலும் இந்தி என்ற ஒன்றிய அரசின் முடிவை அனுமதிக்க முடியாது. இந்தி தேசியமொழி அல்ல. அது நாட்டில் உள்ள மற்ற மொழிகளைப் போல் ஒரு மாநில மொழியே. அதை ஏன் மகாராஷ்டிராவில் தொடக்கக் கல்வியில் கற்பிக்க வேண்டும். நாங்கள் இந்துக்கள்தான் ஆனால் இந்திக்காரர்கள் அல்ல. மாநிலத்தை இந்தி மயமாக்க விரும்பினால் போராட்டம் வெடிக்கும்’
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.