எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனதில் இருந்து அவருக்கு ஏராளமான பிரச்னைகள் இருந்து வருகின்றன. பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக ஓபிஎஸ் அடுத்தடுத்து தொடுத்த வழக்குகள், ஓபிஎஸ் நீக்கம், வேலுமணி, தங்கமணியுடனான கருத்து மோதல், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, சரியான கூட்டணி அமைக்காததால் தொண்டர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி, செங்கோட்டையன் விவகாரம், இரட்டை இலை தொடர்பான வழக்கு என அடுத்தடுத்த பிரச்னைகளை எதிர்கொள்கிறார்.
இதன் தொடர்ச்சியாக அதிமுக-பாஜக கூட்டணி அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் ஏப்ரல் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கூட்டணி அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.
பொதுக்குழுவைக் கூட்டி எல்லா முடிவுகளையும் எடுக்கக் கூடிய எடப்பாடி, பாஜவுடனான கூட்டணியை மட்டும் யாருக்கும் அறிவிக்காமல் இரகசியமாக வைத்திருந்து பாஜகவுடன் திடீர் கூட்டணி அமைத்துவிட்டார் என அதிமுகவில் பெரும்பாலான தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விருந்து வைக்க உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி இரவு விருந்து உபசரிப்பு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருந்தின் போது ஊர்வன முதல் பறப்பன வரை விருந்தில் இருக்கும் என்று தெரிகிறது. அதாவது, சிக்கன், மட்டன், இறால், மீன், முட்டை என விதவிதமான அசைவ விருந்து படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சைவத்தை விரும்பும் உறுப்பினர்களுக்கும் சைவ உணவுகள் தயார் செய்யப்பட உள்ளன. இதில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.விருந்தின்போது மதுவுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருந்தில் பங்கேற்கும் அனைவருக்கும் விருந்து முடிந்ததும் பெரிய பரிசுகள் வழங்க எடப்பாடி முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூவத்தூரில் தான் அதிமுக சமஉக்கள் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக இருந்தனர். அதன்பிறகு இப்போதுதான் சமஉக்களுக்கு விருந்தளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதற்காக இந்த திடீர் விருந்து?
எடப்பாடி பழனிச்சாமி இரட்டை இலைச் சின்னத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என சூரியமூர்த்தி, இராம்குமார் ஆதித்யன், ஓபிஎஸ், புகழேந்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்திலும் மனு அளித்துள்ளனர். அதன் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.
இதற்கிடையே, அதிமுக தொடர்பாக, தான் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில், சூரியமூர்த்தி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அளித்த மனுக்கள் அனைத்தின் மீது விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில்,எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், பெங்களூரு புகழேந்தி, இராம்குமார் ஆதித்யன், சூரியமூர்த்தி உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பியுள்ளது. அதில், அதிமுக விவகாரம் தொடர்பாக இறுதி விசாரணை ஏப்ரல் 28 ஆம் தேதி மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடைபெறுகிறது. அதில் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 28 ஆம் தேதி தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளதால் அதற்கு முன்பாக கட்சியினரை தன் வசம் வைத்திருக்க சமஉக்களுக்கு விருந்து மற்றும் பரிசு என இறங்கியுள்ளார் என்றும் அவ்விருந்து நிகழ்வில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடமும் இரட்டை இலை தொடர்பாக ஆதரவுக்கடிதம் பெறத் திட்டமிட்டுள்ளார் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.