
இந்திய ஒன்றியத்தில்,தமிழ்நாடு,மேற்கு வங்காளம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடந்தது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடந்தது. மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டுகட்டங்களாகத் தேர்தல் நடந்தது.முதல்கட்டத் தேர்தல் ஏப்ரல் 23,இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் நடந்தது.
இவை அனைத்தும் நடந்து முடிந்ததும், இன்று,வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு உருளை விலை ரூ.993 உயர்ந்தது. விலை உயர்வை அடுத்து டெல்லியில் வணிகப் பயன்பாட்டு உருளை ரூ.3071.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.968 உயர்ந்து ரூ.3237க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக எரிவாயுத் தட்டுப்பாட்டால் விலை உயர்ந்துள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதேநேரம், இது முழுக்க முழுக்க அரசியல். அண்மையில் நடந்து முடிந்த ஐந்துமாநிலத் தேர்தல்களிலும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தோல்வியைத் தழுவும் என்று சொல்லப்படுகிறது.அதனால் மக்களைப் பழிவாங்கும் எண்ணத்துடன் இந்த விலையேற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்கிற விமர்சனங்கள் வருகின்றன.
அதற்குச் சான்றாக, வளைகுடா போர் பிப்ரவரியிலேயே தொடங்கிவிட்டது.அப்போதிருந்து இந்தியாவுக்கு இதனால் எந்தப்பாதிப்பும் இல்லையென்றே மோடி அரசு கூறிவந்தது.
ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிந்தபின்பு ஒரேயடியாக 993 ரூபாய் விலை உயர்வு செய்யப்பட்டிருக்கிறது. வணிகப் பயன்பாட்டுக்கான விலை உயர்வதால் நாட்டில் அனைத்து உணவகங்களிலும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்கள் விலை கடுமையாக உயரும் வாய்ப்புள்ளது.இதனால் மக்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாவார்கள்.
இப்போது ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்து வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியான பின்பு இந்தக் கடுமையான விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தேர்தலில் தோல்வியைக் கொடுக்கும் மக்களுக்கு பாஜக அரசு கொடுக்கும் தண்டனை என்று சொல்கிறார்கள்.
