தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
கடந்த மாதம் தமிழக ஆளுநரைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் குடியரசுத்தலைவருக்கு விரைவாக அனுப்பும்படி கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், தில்லியில் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குடியரசுத்தலைவர் அலுவலகத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும்படி கோரி சனவரி 28 ஆம் தேதி மனு வழங்கினர்.
இந்தக் கோரிக்கையை நேரில் வலியுறுத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நேரம் கேட்கப்பட்டது. ஆனால், உத்தரப்பிரதேச தேர்தல் பணியில் அவர் இருந்து வருவதால் நேரம் வழங்கவில்லை.
இந்நிலையில், நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட மனுவை ஒன்றிய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நேற்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் வழங்கினர்.
பின்னர், டி.ஆர்.பாலு அளித்த பேட்டியில்,
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகச் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்படாமல் ஆளுநர் இல்லத்தில் இருக்கிறது. சட்டப்படி அவர் அனுப்பி இருக்க வேண்டும். இதுசார்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெளிவாக வழங்கியுள்ளது. கடந்த 28 ஆம் தேதியும் இது குறித்த கோரிக்கை கொண்ட மனுவை குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் கொடுத்தோம்.
அதன் தொடர்ச்சியாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டோம்.12 மணிக்குச் சந்திக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால்,திடீரென தொலைபேசி செய்து 12 மணி சந்திப்பு இரத்து என்றும் சந்திப்பு நேரம் எப்போது என்பதைப் பின்னர் சொல்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். அனைத்துக்கட்சியைச் சேர்ந்தவர்களும் அவருடைய அழைப்புக்காகக் காத்திருக்கிறோம்.நேரம் கொடுத்தால், நீட் தேர்வு இரத்து குறித்து அவரிடம் எடுத்துரைப்போம். இந்தத் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 13 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்றார்.
இந்தச் சந்திப்பில் அதிமுக சார்பில் நவநீத கிருஷ்ணன், காங்கிரசு சார்பில் ஜெயக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன்,பொதுவுடைமைக்கட்சி சு.வெங்கடேசன் மற்றும் செல்வராஜ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி நவாஸ்கனி ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழகத்தின் ஆளும்கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஒன்றுகூடி நேரம் கேட்டபோதும் கொடுக்க மறுத்திருக்கும் அமித்ஷாவின் போக்கு தமிழ்நாட்டுக்கெதிரான பாஜகவின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகக் கூறுகின்றனர்.அதோடு திமுகவும் அதிமுகவும் இணைந்து வருகிறது என்பதும் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.