தமிழக அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய்த்தொற்றாக அறிவித்து உள்ளது. அ.தி.மு.க. அரசு எடுத்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களில் இருந்து பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு உள்ளேன்.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய 4 விமான நிலையங்களிலும் வெளிநாட்டில் இருந்து பயணிகள் வருகின்றனர். மத்திய அரசு சில வெளிநாட்டு பயணிகள் வருகையை தடை செய்து உள்ளது. எனினும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின்படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த உத்தரவிட்டு உள்ளேன்.
அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்பு பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் (எல்.கே.ஜி-யு.கே.ஜி.), தொடக்கப்பள்ளிகளுக்கும் (1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை) 31-3-2020 வரை விடுமுறை அளிக்கவும், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் (தாலுகா) உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் (மால்கள்) 31-3-2020 வரை மூடவும் உத்தரவிட்டு உள்ளேன்.
கெரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடக்கிவிட முதல்-அமைச்சர் மாநில பேரிடர் நிதியில் இருந்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.30 கோடி, போக்குவரத்துத்துறைக்கு ரூ.5 கோடி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.4 கோடி, நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.6 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.5 கோடி, பேரூராட்சி இயக்குநரகத்துக்கு ரூ.2 கோடி, இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.3 கோடி, பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறைக்கு ரூ.2 கோடி, அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.50 லட்சம் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு ரூ.2.5 கோடி ஆக மொத்தம் ரூ.60 கோடி உடனடியாக வழங்க ஆணையிட்டு உள்ளேன்.
மாநிலத்தில் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இப்பணிகளை கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்கவும் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளுக்கு ஆணையிட்டு உள்ளேன்.
பொது இடங்களில் குறிப்பாக கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு வருகை புரியும் மக்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து, அத்தகையோரை மக்கள் கூடும் இடங்களுக்கு வருவதை தடுக்க தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் ஆணையிட்டு உள்ளேன்.
மேற்கூறிய பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன். கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்தும், தேசிய நலவாழ்வு குழும நிதியில் இருந்தும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியதன் பேரில், போர்க்கால அடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு இருக்கிறேன்.
மேலும், மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படுத்த வருவாய் நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டு உள்ளேன். கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை மாவட்ட கலெக்டர்கள், வருவாய் நிர்வாக ஆணையருக்கு தினந்தோறும் அனுப்ப வேண்டும் என்றும், வருவாய் நிர்வாக ஆணையர் அந்த அறிக்கைகளை தொகுத்து, சுகாதாரத்துறை அமைச்சருக்கும், எனக்கும் தினசரி அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் உத்தரவிட்டு இருக்கிறேன்.
மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க சுகாதாரத்துறை அமைச்சரை அறிவுறுத்தி உள்ளேன்.
மேலும், பொதுமக்கள் சில அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டுகோள் விடுக்கிறேன்.
* பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்குப் பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும்.
* கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
* பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை பேணவும், குறிப்பாக வீட்டுக்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.
* கைகளைச் சுத்தம் செய்யாமல், முகத்தைத் தொட வேண்டாம்.
* பெற்றோர் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின் போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டுக்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.
* கொரோனா வைரஸ் நோயைத் தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால்தான் வெற்றிபெற இயலும் என்பதைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பை ஒட்டி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூறியிருப்பதாவது….
கொரோனா வைரஸ் காய்ச்சலால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.எனவே
நமது தலைவர் நம்மவர் அவர்களின் அறிவுரையின்படி , நமது கட்சி சார்பாக அனைத்துக் பொதுக்கூட்டங்கள் , கூட்டங்கள் , போன்றவற்றை தமிழகம் முழுவதும் மார்ச் 31 , 2020 வரை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.