
சென்னை அண்ணா அறிவாலயத்தில்,திமுக கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிக் கொண்டிருந்த வேளையில்,நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார்.அப்போது மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதிகள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்த்தால் அதற்கு நேர்மாறாக நடந்துவிட்டது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில்….
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்,தேச நன்மைக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம்.கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம்.அதன்விளைவாக,மக்கள் நீதி மய்யத்தின் குரல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒலித்தது.அன்றுமுதல் இன்றுவரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல்,கூட்டணி தர்மத்தைப் பேணி வருகிறோம்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின்போது முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் திமுக பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்களும் அன்போடும் மரியாதையோடும் நட்புணர்வோடும் நடந்துகொண்டார்கள் என்பதைப் பதிவு செய்யத்தான் வேண்டும்.
இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில்,நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதிகள் எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை.
அவர்களது தரப்பில் அதற்கான நியாயம் இருக்கிறது என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். எப்படியாவது தமிழ்நாட்டைக் கைப்பற்றிவிட வேண்டுமென மதவாத சக்திகள் சகலவழிகளிலும் சூழ்ச்சி செய்துகொண்டிருக்கும் சூழலில் கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பே முதன்மையானது. நியாயமானதும் கூட.
ஆனால், பேட்டரி டார்ச் சின்னத்துடனான மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் பிணைப்பு உணர்வுப்பூர்வமானது. ஏனெனில்,பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல.அது எங்களின் அடையாளம்.கடந்த ஒன்பது ஆண்டுகளாக எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது;புறக்கணிக்கவும் மாட்டேன்.
தமிழ்நாட்டின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு,தமிழ்மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழலில்,எங்கே எங்கள் பங்கு என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை.சுயநலம் அல்ல;பொறுமை.
தேர்தல் அரசியலில் யாருமே இப்படிச் செய்ததில்லையே என்று கேட்பீர்களானால்,ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் விதை நான் போட்டது என்று பணிவோடு சொல்வேன்.முதலமைச்சர் அன்போடு அளிப்பதை பெருமையோடு மறுப்பதும் அன்பின் வடிவமே.தங்கள் குடும்பத்துக்காக எத்தனையோ பேர் தன் வீட்டைவிட்டு,ஊரைவிட்டு, நாட்டைவிட்டு எண்ணற்ற தியாகங்களைச் செய்கிறார்கள்.தமிழ்நாடுதான் என் குடும்பம்.நான் சீட்டுகளை விட்டுக்கொடுத்திருக்கிறேன்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு,திராவிட மாடல் 2.0 அரசு அமைவது இன்றைய தேவை.இது வெறும் ஆட்சி மட்டுமல்ல.காந்தி,பெரியார்,அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நீதிபரிபாலனம். ஆகவே 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்கிற முடிவை திறந்த மனதுடன்,தெளிந்த உள்ளத்துடனும் அறிவிக்கிறோம்.
என்னையும் என் அரசியலையும் புரிந்துகொண்டு எந்த சுயநலமின்றி,ஒன்பது ஆண்டுகளாக என்னோடு தொடர்ந்து பயணிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும்,நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் சுயநலமற்ற அரசியலுக்கு ஆகச்சிறந்த முன்னுதாரணங்கள்.இந்தமுடிவு உங்கள் உணர்வுக்கும்,உங்கள் நம்பிக்கைக்கும் நான் செலுத்தும் மரியாதை.அரசியல்களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது.அரசியலில் முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது.மண்ணுக்கான,மக்களுக்கான, மொழிக்கான நமது போராட்டம் எப்போதும்போல் தீரத்துடன் தொடரும்.
மிகவிரைவில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் அவரை மகிழ்ச்சியோடு நாம் சந்தித்து வாழ்த்துவோம் எனும் நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் இந்தமுடிவு அரசியலரங்கில் மிக வியப்புடன் பார்க்கப்படுகிறது.தேர்தல் அரசியலில் இது மிகமிக திடமான முடிவு என்று சொல்லப்படுகிறது.


