பொய்வழக்கில் பேராசிரியர் கைது – பூவுலகின்நண்பர்கள் கண்டனம்


கதிராமங்கலத்தில் ஓ என் ஜி சி பணிகளைத் தொடரக்கூடாது என்று அமைதி வழியில் எதிர்ப்பு தெரிவித்த பேராசிரியர் ஜெயராமன் உட்பட 11 பேர் சிறையில் அடைப்பு.

தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் எனும் கிராமத்தின் விளைநிலங்களில், ஓ.என்.ஜி.சி தனது எண்ணெய்க் குழாய்களைப் பதித்துள்ளது. இந்தக் குழாய்களால், விளைநிலங்கள் தற்போது கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன. இது, அந்தக் கிராம மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குரிய நிவாரணத்தை ஓ.என்.ஜி.சி நிர்வாகம் வழங்க வேண்டும் என கதிராமங்கலம் கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர். ஆனால் ஓ.என்.ஜி.சி நிர்வாகமோ, இழுத்தடிப்பு செய்துவந்தது.

இந்நிலையில், கதிராமங்கலம் பகுதிகளில் மேலும் எண்ணெய்க் குழாய்களைப் பதிக்க ஆயத்தமானது, ஓ.என்.ஜி.சி. இது, கதிராமங்கலம் கிராம மக்களிடையே கடும் கோபத்தை உண்டுபண்ணி, அவர்களைப் போராட்டத்தை நோக்கித் தள்ளியது. அந்தக் கிராம மக்களுடன், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடிய, ‘மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு’ கைகோர்த்தது. அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா.ஜெயராமன் தலைமையில், நேற்று காலை கதிராமங்கலத்தில் போராட்டம் தொடங்கியது. உடனடியாக அந்தப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பேரா.ஜெயராமன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்:
1.பேராசிரியர் செயராமன்,
2.ஆடுதுறை முருகன்,
3.தர்மராஜன்,
4.மாணவர் சீனிவாசன்,
5.ராஜு,
6.குளஞ்சிநாதன்,
7.கருணாநிதி,
8.விஜயராகவன்,
9.வழக்கறிஞர் கரிகாலன்,
10.பிரபு,
11.சேதுராசன்

கைது செய்யப்பட்டவர்கள் மீது பிணையில் விடுவிக்கமுடியாத பிரிவுகளின் கீழ் பொய் வழக்கு தொடுக்கப்பட்டு கும்பகோணம் சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.

அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொய்வழக்கு புனைந்து சிறையில் அடைத்ததை பூவுலகின் நண்பர்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

Leave a Response