
ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரைபேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருவருக்கும் உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் தங்களை வரவழைத்து துன்புறுத்தக்கூடாது என காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி செந்தில்பாலாஜியும்,அசோக்குமாரும் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல்
செய்திருந்தனர்.
அதில்,அமைச்சர் ஆதவ்அர்ஜூனா சமீபத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக தீர்க்கப்பட வேண்டிய கணக்கு ஒன்று
உள்ளது என வெளிப்படையாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.அதன்படி ஏதேனும் ஒரு வழக்கில்
எங்களைக் கைதுசெய்ய காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.ஊத்தங்கரை தவெக சமஉவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதியப்பட்டுள்ள வழக்கில் எங்களை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை எனக்கூறி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ள நிலையில்,தொடர்ந்து காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.சட்டப்படியான எந்த புலன்விசாரணையையும் நாங்கள் தடுக்கவில்லை.காவல்துறையில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு நாங்கள் தேவைப்படுவதாக இருந்தால் சட்டப்படி முறையாக நோட்டீஸ் அனுப்ப காவல்துறையினருக்கு உத்தரவிடவேண்டும்.குறிப்பாக,விசாரணை மற்றும் சோதனை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தக்கூடாது என காவல்துறையினருக்கு உத்தரவிடவேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்தமனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று நடந்தது.அப்போது மாநிலஅரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான்சத்யன் ஆஜராகி,மனுதாரர்கள் தங்களை காவல்துறையினர் துன்புறுத்தக்கூடாது என பொத்தாம் பொதுவான உத்தரவைக் கோருகின்றனர்.இந்த விவகாரத்தில் காவல்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளனர்.எனவே இதுதொடர்பாக விரிவாக பதிலளிக்க அவகாசம் வழங்கவேண்டும் எனக் கோரினார்.
செந்தில்பாலாஜி,அசோக்குமார் தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ,குதிரைபேர வழக்கில் முன்பிணை பெற்று உள்ள மனுதாரர்களை வேறு வழக்கில் காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என்ற அச்சம் உள்ளது.இந்தவழக்கின் விசாரணையில் மனுதாரர்கள் தலையீடு செய்யவில்லை.மாறாக விசாரணை என அழைத்து துன்புறுத்தக்கூடாது எனக் கோருகிறோம் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன்,தவெக சமஉவிடம் குதிரைபேரம் நடத்தியதாகப்
பதியப்பட்ட வழக்கில் மனுதாரர்களுக்கு முன்பினை வழங்கப்பட்டும்,இன்னும் அவர்கள் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து பிணை பெறவில்லை.இந்தச்சூழலில் தங்களை துன்புறுத்தக்கூடாது எனக்கோர முடியாது.மற்ற
வழக்குகளைப் பொருத்தமட்டில் முன்கூட்டியே இந்தமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் மனுதாரர்
கோரியுள்ளபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்கமுடியாது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து,எப்படியாவது செந்தில்பாலாஜியைக் கைது செய்யவேண்டும் என்று காவல்துறை தீவிரம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.


