
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது….
தவெகவின் ஆட்சி சினிமா படம் பார்ப்பது போல உள்ளது.எதார்த்தத்திற்கும்,ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை. இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் இளைஞர்களைக் கவர்ந்து மாற்றம் என வாக்குறுதிகளைச் சொல்லி,அவர்களே ஆட்சிக்கு வருவோமா எனத் தெரியாமல் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டு மக்கள் தங்களது தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரே தெரியாமல்,சினிமா கதாநாயகனை நம்பி வாக்களித்து,குடும்பத்தினரை வாக்களிக்க வைத்துள்ளனர்.தமிழைக் கூடச் சரியாக வாசிக்கத் தெரியாதவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கியுள்ளார்கள்.இவர்களை தற்குறிகள் எனச் சொல்வது சரிதான்.
இந்த ஆட்சி 24 ஆம் புலிகேசி ஆட்சிபோல உள்ளது.ஆதவ் அர்ஜூனா மில்லி லிட்டர் என சொல்லத் தெரியாமல் மில்லி மீட்டர் என்கிறார்.தமிழ் பேசத் தெரியாது எனச் சொன்னால் கிறிஸ்துவ மதம் என நிதியமைச்சர் சொல்கிறார்.மதத்திற்கும்,மொழிக்கும் என்ன சம்பந்தம்? எதோடு சேர்ந்தால் கன்றும் எதையோ தின்னும் என்பது போல,சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பேசுகிறார்.பல கட்சி நிர்மல்குமார் ஏதேதோ பேசுகிறார்.சபாநாயகர் நடுநிலையாகப் பேசுவதுபோல,அமைச்சர்களை தவறான கருத்தைப் பேசவைத்து நீக்குகிறார்.
விஜய் எதிர்பார்க்காதது நடந்துவிட்டது.தேர்தல் வாக்குறுதியாக ஏதேதோ அடித்துவிட்டார்,மாட்டிக்கொண்டார்.100 நாட்களுக்கும் மேலாக முதலமைச்சர் மவுனவிரதம் இருக்கிறார்.அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள் எல்லோருக்குமே 4 ஆம் வகுப்பு மாணவனுக்கு உள்ள அடிப்படை கணினி அறிவு கூட இல்லை.விஜயால் எழுதி வைக்காமல் பேசமுடியுமா எனத் தெரியவில்லை.
விஜய் பிரதமர் என்றால்,டெல்லியில் தற்குறி பாராளுமன்றமாக மாறிவிடும்.நான் டெல்லி சென்றபோது விஜய்யுடன் கூட்டணி சேருங்கள்.நாங்களும் வந்துவிடுவோம் என என்னிடம் காங்கிரசை சேர்ந்த முக்கிய பிரமுகர் பேசினார்.
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகமாக உள்ளது.இலஞ்சம்,ஊழல் குறையவில்லை.பதவி ஆசை உள்ளவர்களை தவெக சேர்த்து வைத்துகொண்டு,மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.கத்தி எடுத்தவர் கத்தியால்தான் வீழ்வர் என்பதாக,இன்ஸ்டாகிராமால் ஆட்சிக்கு வந்தவர்கள்,இன்ஸ்டாகிராமால் வீழ்வார்கள். தவெக என்ற பாதக,நாசகார,விஷம சக்தியை ஒழிக்க எல்லாச் சக்திகளும் அவரவர் வழியில் வேலைகள் செய்வர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


