
தமிழகத்தில் 6,600 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள்,அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.இவற்றின் வழியாக,தினசரி ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள்,அரசு,ஆம்னி பேருந்துகள்,பயணிகள் வாகனங்கள்
உள்ளிட்டவை பயணித்து வருகின்றன.
இச்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க,தமிழகத்தில் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன.தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணவிதிகளின்படி,ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில் சுங்கச்சாவடிகளில்,கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
அதன்படி,பாளையம்,கோட்டகவுண்டம்பட்டி,ராசம்பாளையம்,விக்கிரவாண்டி,மேட்டுப்பட்டி,நாதன்கரை, வீரசோழபுரம்,பொன்னம்பாலப்பட்டி,திருப்பராய்த்துறை,மணவாசி,செங்குறிச்சி,திருமாந்துறை,சமயபுரம்,
வேலஞ்செட்டியூர்,கொழிஞ்சிபட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் நேற்று முதல் 5 முதல் 7 விழுக்காடுவரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால்,வாகனங்களுக்கு ஏற்றாற்போல்,ரூ.5 முதல் 20 வரை கட்டணம் அதிகரித்துள்ளது.
இதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாமல் கட்டண உயர்வா? தமிழ்நாடு அரசு,ஒன்றிய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறதா?
தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு என வெளியாகியுள்ள செய்திகள் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
சாலை அமைப்பதற்காக விதிக்கப்பட்ட சுங்கக்கட்டணம்,சாலை அமைத்த செலவைத் தாண்டியும் பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது.ஒப்பந்தக் காலமே முடிவடைந்த சுங்கச்சாவடிகள்கூட இன்னும் தொடர்ந்து கட்டணம் வசூலிப்பது எந்தவகையில் நியாயம்?
ஒப்பந்தக்காலம் முடிவடைந்த சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்றவேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி பலமுறை ஒன்றிய,மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளது.
ஆனால்,மக்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு,காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாமல் ஆண்டுதோறும் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் அல்லவா?
பெட்ரோல்,டீசல்,அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்தின் விலையும் உயர்ந்துள்ள நிலையில்,சுங்கக் கட்டண உயர்வு என்பது நேரடியாகவே பொதுமக்கள்,விவசாயிகள்,தொழிலாளர்கள்,சிறுவணிகர்கள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.
மக்களிடம் வசூலிப்பதில் மட்டும் வேகம் காட்டும் ஒன்றிய அரசு,காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவதில் ஏன் தயக்கம் காட்டுகிறது?
தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கப்படும் இந்த சுங்கக்கொள்ளைக்கு மாநில அரசு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது?
எனவே,சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுவதுடன்,ஒப்பந்தக் காலம் முடிவடைந்த அனைத்து சுங்கச்சாவடிகளையும் உடனடியாக அகற்றவேண்டும்.
இக்கோரிக்கைகளை ஒன்றிய,மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்தால்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு,மக்கள் பங்கேற்கும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


