திமுக ஆட்சியைவிட விஜய் ஆட்சியில் கனிமக்கொள்ளை அதிகம் – அன்புமணி பட்டியல்

பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

தமிழகத்தின் திருநெல்வேலி,தென்காசி மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவது தொடர்வதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தின் வழியாக கனிமங்களைக் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ள நிலையில்,தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் தேசியநெடுஞ்சாலை 66 இன் வழியாக கனிமங்கள் கடத்தப்படுவது மட்டும்தான் நிறுத்தப்பட்டிருக்கிறதே தவிர,தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு தொடர்ந்து கனிமம் கடத்தப்படுவது கவலையளிக்கிறது.

இந்தியாவுக்கு இயற்கை கொடுத்த கொடையான மேற்குத் தொடர்ச்சி மலை,குஜராத் மாநிலத்தில் தொடங்கி தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் வழியாகப் பயணித்து கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு பகுதிவரை நீள்கிறது. போக்கிசமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த மலைப்பகுதி தமிழ்நாட்டில் கொலை செய்யப்படுகிறது.

குறிப்பாக தென்காசி,நெல்லை மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதிகளில் கல்குவாரிகள் அமைக்கப்பட்டு கனிமக்கொள்ளை எல்லையில்லாமல் நடக்கிறது.கடந்த திமுக ஆட்சியில்தான் இந்தக் கொள்ளை உச்சத்தை அடைந்தது.நெல்லை,தென்காசி,குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவிற்குக் கடத்தப்படுவது குறித்தும்,திமுகவைச் சேர்ந்தவர் இந்தக்கடத்தலுக்கு
காட் ஃபாதராக திகழ்ந்தது குறித்தும் கடந்தகாலங்களில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினேன்.திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு கனிமவளக் கொள்ளையும் காரணமாக இருந்தது.

முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்ட பிறகாவது கனிமக்கொள்ளைக்கு முடிவு கட்டப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள்.அவர்களின் நம்பிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பல மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.மேலோட்டமாகப் பார்க்கும்போது இவை வரவேற்கத்தக்க மாற்றங்களாகத் தோன்றினாலும் களத்தில் இன்றுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை;தென்காசி மாவட்டம் செங்கோட்டை,கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிமங்கள் கேரளத்திற்குக் கடத்தப்படுவது இப்போதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என புகார்கள் எழுந்துள்ளன.

கனிமக்கொள்ளையை கட்டுப்படுத்துவதற்காகாக தமிழகஅரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் எந்தப்பயனும் விளையவில்லை.அரசு இயந்திரத்தைவிட அதிநுட்பமான வலைப்பின்னலைக் கொண்டிருக்கும் கனிமவள மாஃபியா அதிகாரிகள் துணையுடன் அமைச்சரையும்,அரசையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை ஆகும்.கனிமவளக் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் அல்லது உயரதிகாரிகள் வருவதாக இருந்தால் அதுகுறித்து கனிமக் கொள்ளையர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகின்றன. அவர்களும் சுதாரித்துக்கொண்டு கனிமக்கொள்ளை நடக்கவில்லை என்று அமைச்சரை நம்பவைப்பதற்குத் தேவையான அனைத்தையும் செய்து விடுகின்றனர்.அதுமட்டுமின்றி,கல்குவாரிகளில் அமைச்சர் ஆய்வு நடத்துவதும் அண்மைக்காலமாக குறைந்துவிட்டது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் ஒரேமாற்றம் என்னவென்றால்,நெடுஞ்சாலைகள் வழியாக இல்லாமல் குறுக்குவழிகளில் கனிமங்கள் கடத்தப்படுவதுதான்.கன்னியாகுமரியை மராட்டிய மாநிலம் பன்வேலியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 66 இல் களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாகத்தான் கனிமவளங்கள் பெருமளவில் கடத்தப்பட்டு வந்தன.அதை நானே நேரடியாகப் பார்த்து பல தருணங்களில் ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்தேன்.அதுமட்டுமின்றி அதிக எண்ணிக்கையில் கனிமம் ஏற்றிச் செல்லும் லாரிகள் சென்றதால் ஏராளமான விபத்துகளும் ஏற்படுகின்றன.அதனால்,களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக கனிமங்களைக் கடத்திச்செல்வது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

அதேநேரத்தில் தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் கனிமங்கள் கடத்திச் செல்லப்படுகின்றன.அதேபோல்,கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையின் வழியாகத்தான் கனிமவளங்கள் கடத்தப்படவில்லையே தவிர,அம்மாவட்டத்தின் கொல்லங்கோடு,கோழிப்போர்விளை,ஊரம்பு,களியல் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக குறுக்குச்சாலைகளில் புகுந்து கனிமங்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் கேரளாவுக்குப் பயணிக்கின்றன.

இதனால்,தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்குக் கனிமங்கள் கடத்தப்படுவது தடையின்றி தொடர்கிறது.இதனால் நெல்லை,தென்காசி மாவட்டங்களில் கனிமக்கொள்ளையும் அளவுக்கு அதிகமாக நடைபெறுகிறது.

தென்மாவட்டங்களில் கனிமக்கொள்ளையை தடுக்கவேண்டும் என்றால்,தமிழ்நாட்டிலிருந்து கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கனிமங்களைக் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட வேண்டும்.ஆனால்,அத்தகைய தடை இன்றுவரை விதிக்கப்படவில்லை.

அண்மையில் கூட,தமிழகத்தில் பற்றாக்குறைக் காலங்களில் கனிமவளங்களைக் கேரளாவுக்கு கொண்டு செல்லக்கூடாது என்றுதான் தடை விதிக்கப்பட்டு இருக்கிறதே தவிர,நிரந்தரத் தடை இன்றுவரை அரசால் விதிக்கப்படவில்லை.

தென்மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கனிமக்கொள்ளையை தடுத்து நிறுத்துவது முடியாத காரியமல்ல.அதற்குத்தேவை அரசியல் துணிச்சல்தான்.கனிமக்கொள்ளை மாஃபியா உள்ளிட்ட பல்வேறுதரப்பினரிடமிருந்து வரும் அழுத்தங்களைப் பற்றி கவலைப்படாமல் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அதன் முதல்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கேரளா உள்ளிட்ட எந்த மாநிலத்திற்கும் கனிமவளங்களைக் கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதிக்கவேண்டும்.இரண்டாம் கட்டமாக,தென் மாவட்டங்களில் இருந்து கேரளா செல்லும் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கண்காணிப்பு காமிரா பொருத்துவதன் மூலம் கனிமவளம் கடத்தப்படுவதை கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் அவரது அலுவலக அறையிலிருந்தே கண்காணிக்க முடியும்.இதன்முலம் கனிமக்கடத்தல் குறையும்.

அடுத்ததாக நெல்லை,தென்காசி மாவட்டங்களில் செயல்படும் சட்டவிரோத குவாரிகளை கருணை காட்டாமல்
மூட வேண்டும்.

நான்காவதாக,சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பவர்களுக்கு பெயரளவில் தண்டம் விதிப்பதை கைவிட வேண்டும்.மாறாக அவர்கள் வெட்டி எடுத்த கனிமத்தின் சந்தைமதிப்பைவிட 100 மடங்கு அதிக தண்டம் விதிப்பதுடன்,குற்றவாளிகளின் சொத்துகளை முழுமையாக முடக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவை அனைத்தையும் விட முக்கியமானது கடந்த காலங்களில் கனிமக்கடத்தலில் ஈடுபட்டவர்களையும், அவர்களை ஊக்குவித்தவர்களையும் தண்டிப்பதுதான்.முந்தைய திமுக ஆட்சியில் அதிகாரம் பெற்றிருந்த
காட் ஃபாதர்களும்,மாஃபியாக்களும்தான் கனிமக்கடத்தலுக்கு துணையாக இருந்தன.இது இருமாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.எந்த அளவுக்கு கனிமக்கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.இத்தகைய துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் கனிமவளக் கொள்ளையை அரசு முழுமையாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Leave a Response