
காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை பெற தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு உரிய நீரைப் பெற நடவடிக்கை எடுக்காதது டெல்டா விவசாயிகளுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்….
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும்.ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீருக்கு பதில் 2.91 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 டிஎம்சி நீர்.20 நாட்களில் சுமார் 21 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும்.ஆனால்,கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்கவேண்டிய சுமார் 6.28 டிஎம்சி நிலுவை தண்ணீரையும்,ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்கவேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன.
இந்நிலையில்,மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் அவர்கள்,கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய பிறகுதான் தமிழகத்திற்கு உரிய பங்கு நீர் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.இதைக் கேட்கும்போது,’கடலில் அலை எப்போது ஓய்வது,நாம் எப்போது குளிப்பது? என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது.கர்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே திறந்துவிட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகள்.ஆனால்,அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம் என்பது ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும்,அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும்,சர்வாதிகாரி போல் நடப்பது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல.பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று,காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு நல்லதீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.அதை மதிக்காத கர்நாடக முதலமைச்சருக்கு,தமிழக மக்களின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்மாதம் 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.இக்கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தரவேண்டும் என்று பொய்க்கால் குதிரை த.வெ.க.-காங்கிரசு கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


