ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசாவிட்டாலும் கூட, அதை எதிர்த்து வழக்கு தொடுத்து நீதிமன்ற தடைவாங்கிய பீட்டா அமைப்புக்கு ஆதரவாக இருந்துவரும் திரிஷாவுக்கு சமூக வலைதளத்தில் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. இதனையடுத்து திரிஷா டுவிட்டரில் இருந்தே வெளியேறினார்.
குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட அந்த கடைசி பதிவை நான் பதியவில்லை என்றும் யாரோ சிலர் தனது கணக்கை ஹேக் செய்துவிட்டார்கள் என்றும் கூறிய திரிஷா டுவிட்டர் கணக்கை டெலிட் செய்துவிட்டார். அவரைத்தொடர்ந்து நடிகர் விஷாலும் டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்டார். காரணம் எதுவும் அவர் கூறவில்லை என்றாலும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்ததை அடுத்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து விஷாலுக்கு எதிர்ப்பு நிலவியதால் டுவிட்டரை விட்டு அவர் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.